துரைமுருகனே இப்படி சொன்னால்... கர்நாடகா எப்படி தண்ணீர் தரும்?.. அமைச்சர் சி.வி.சண்முகம் கொந்தளிப்பு
விழுப்புரம்: தமிழகத்தில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீரை தர முன்வருமென சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
பருவமழை பொய்த்து போனதால், நீர் நிலைகள் வறண்டு போயின. தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு, மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்தநிலையில், சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என திமுக பொருளாளர் துரைமுருகன், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக மக்கள் தண்ணீர் கேட்டு, ஆள்பவர்களிடம் முறையிடுகின்றனர். ஆள்பவர்களோ ஆண்டவரிடம் முறையிடுகிறார்கள் என்று கூறினார்.
நிர்வாகம் நடத்த முடியாவிட்டால், அரசு வெளியேற வேண்டும். இல்லையெனில் மக்கள் வெளியேற்றுவார்கள். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தண்ணீர் பிரச்சினை தான் முதன்மையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தநிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழகத்தில் இருந்து கொண்டு, மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கூறுபவர்களுக்கு, சமுதாயம் மீது என்ன அக்கறை உள்ளது. இவர்களே இப்படி கூறினால், கர்நாடகத்தில் இருந்து மட்டும் எப்படி தண்ணீர் தருவார்கள்? என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்குள்ளேயே தண்ணீர் பிரச்சனையை திமுக எழுப்புவது கண்டிக்கதக்கது என்றும் கூறினார்.
இதற்கிடையில், சென்னையில் குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி திமுக சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம், அதிமுக சார்பில், கோவில்களில் மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டு வருகிறது. தண்ணீரை வைத்து அரசியல் நடந்து வருவதால், இடையில் தவிப்புக்கு ஆளாகி வருவது நாங்கள் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.