விஜயகாந்த் மகனை முன்னிறுத்தும் தேமுதிக... விருத்தாசலம் தொகுதியில் களமிறங்குகிறாரா விஜய பிரபாகரன்...?
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த்தை வெற்றிபெற வைத்த விருத்தாசலம் விஜய பிரபாகரனையும் வெற்றிபெற வைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது தேமுதிக தலைமை.
விஜயகாந்த் தற்போது முழுமையாக ஓய்வில் இருப்பதால் வேறுவழியின்றி தேர்தல் களத்திற்கு வரவிருக்கிறார் விஜய பிரபாகரன்.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரன் இப்போது கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். கூடிய விரைவில் தேமுதிக இளைஞரணியில் மிக முக்கியப் பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடும் திட்டத்தில் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் சாய்ஸ்
அவ்வாறு அவர் போட்டியிடும் பட்சத்தில் விருத்தாசலம் தொகுதி தான் தேமுதிக தலைமையின் முதல் சாய்ஸ் எனக் கூறப்படுகிறது. 2006-ல் விஜயகாந்தை தேமுதிக சார்பில் ஒற்றை ஆளாக வெற்றிபெற வைத்து அவரை சட்டமன்றத்திற்குள் அனுப்பி வைத்த தொகுதி என்பதால் அதனை செண்டிமெண்ட் ரீதியாகவும் பார்க்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
வேலூர் மாவட்டம்
இதைத்தவிர மதுரை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டத்திலும் விஜய பிரபாகரனுக்காக ஒரு சில தொகுதிகளில் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஒரு வேளை விருத்தாசலம் தொகுதி இல்லையென்றால் அந்த இரண்டு மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. தேமுதிகவை பொறுத்தவரை விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகிய நால்வரை விட்டால் அங்கு வேறு யாரையும் நட்சத்திரப் பேச்சாளர்களாக கருத முடியாது.
நட்சத்திரம்
இதில் விஜயகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு பிரச்சாரத்திற்கு செல்வாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இப்படியிருக்க பிரேமலதா, விஜயபிரபாகரன் ஆகியோர் தான் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய பிரபாகரன் தாம் போட்டியிடும் தொகுதியில் தேர்தல் பணிகளை பார்த்தால் மற்ற தொகுதிகளில் யார் பிரச்சாரம் செய்வது என்ற கேள்வியும் தேமுதிகவினரிடையே எழுந்துள்ளது.