ராமதாசுடன் இஸ்லாமிய கூட்டமைப்பினர் சந்திப்பு... தைலாபுரத்தில் நடைபெற்ற பேச்சு
விழுப்புரம்: குடியுரிமை சட்டம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசிய இஸ்லாமிய கூட்டமைப்பினர் போராட்டங்களுக்கு அவரிடம் ஆதரவு கோரினர்.
குடியுரிமை சட்டம் மட்டுமல்லாமல் மற்ற கருப்பு சட்டங்களுக்கு எதிர்த்தும் குரல் கொடுக்க வேண்டும் என ராமதாஸிடம் அவர் கோரிக்கை விடுத்தனர்.
சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ராமதாஸ் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது.
போராட்டங்கள்
குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அஸ்ஸாமில் தொடங்கிய போராட்ட பொறி இன்று கேரளா, தமிழகம் என நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது. ஆர்ப்பாட்டம், பேரணி, மனிதச்சங்கிலி என பல வகைகளில் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்தக்கட்டமாக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாளை கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
திடீர் சந்திப்பு
இந்நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை அவரது தைலாபுரம் இல்லத்தில் இன்று நண்பகல் சந்தித்தனர். அப்போது குடியுரிமை சட்டத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும் என எடுத்துக்கூறினர். அவர்கள் கூறியதை பொறுமையாக கேட்டுக்கொண்ட ராமதாஸ், ராஜ்யசபாவில் பாமக ஆதரிக்க வேண்டிய சூழலை விவரித்துள்ளார். இதனிடையே இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ராமதாஸ், சிறுபான்மை மக்களுக்காக தாம் விடுத்த அறிக்கைகள், கொடுத்த குரல் குறித்தெல்லாம் விவரித்துள்ளார்.
ஐ.யூ.எம்.எல். மிஸ்ஸிங்
இந்தச் சந்திப்பில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டார். ஆனால் மற்றொரு திமுக கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ராமதாசை சந்திக்க யாரும் செல்லவில்லை. ஏற்கனவே குடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இஸ்லாமிய கூட்டமைப்பினர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராமதாஸையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.
நலம் விசாரிப்பு
இஸ்லாமிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் ராமதாஸை சந்திக்க வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தைலாபுரம் சென்றுவிட்டார். அவர் வந்த தகவலறிந்து அவரை அழைத்த ராமதாஸ் தேநீர் கொடுத்து நலம் விசாரித்ததுடன் நடப்பு அரசியல் நிலவரங்கள் பற்றியும், சட்டமன்ற செயல்பாடு பற்றியும் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் பாமக தலைவர் கோ.க.மணி உள்ளிட்டோர் இருந்தனர். ஆனால் அன்புமணி அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.