"முகமது நபி பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும்".. பேஸ்புக்கில் பதிவிட்ட கார்ட்டூனிஸ்ட் வர்மா கைது
விழுப்புரத்தில் கார்ட்டூனிஸ்ட் வர்மா அதிரடி கைது செய்யப்பட்டார்
விழுப்புரம்: "கறுப்பர் கூட்டம்" சேனலுக்கு பின்னால் இயங்கும் சிப் முகமதுவை அத்தனை ஜமாத்களும் இஸ்லாத்தில் இருந்தே வெளியேற்றி விட்டதாக, எண்ணி 24 மணி நேரத்தில் அறிவிக்க வேண்டும்... இல்லையென்றால், முகமது நபியை பற்றிய கார்டூன் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும்" என்று பரபரப்பை கிளப்பிய கார்ட்டூனிஸ்ட் வர்மாவை விழுப்புரம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Recommended Video
கறுப்பர் கூட்டம் - இந்து அமைப்புகள் விவகாரம் கடந்த 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. கறுப்பர் கூட்டம் பற்றி மாரிதாஸ் பேசிய பிறகு இது தொடர்பான கருத்துக்கள் எழுந்தபடியே உள்ளன...
இந்த சமயத்தில்தான் கந்த சஷ்டி வீடியோ காட்சி இந்து அமைப்புகளை இன்னும் கொதிப்பில் தள்ளியது.. அதனால் அந்த வீடியோவுக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் போலீசில் புகார் தரப்பட்டுள்ளன.
இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்ததாக புகார்- கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது வழக்கு
கார்ட்டூனிஸ்ட்
இந்த விவகாரம் ஏற்கனவே கொந்தளித்து கிடந்த நேரத்தில், கார்டூனிஸ்ட் வர்மா ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார்.. அதில், கறுப்பர் கூட்டத்தின் பின்னால் இயங்கும் இஸ்லாமிய கும்பலை, இஸ்லாமிய தலைவர்களே முன்வந்து கண்டிக்க வேண்டும்.. இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய இயக்கங்களுக்கும், ஹிந்து துவேஷ கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு, தாங்கள் ஹிந்துக்கள் பக்கம் நிற்கிறோம் என்பதை இஸ்லாமியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கறுப்பர் கூட்டம்
கறுப்பர் கூட்டம் சேனலுக்கு பின்னால் இயங்கும் சிப் முகமதுவை அத்தனை ஜமாத்களும் இஸ்லாத்தில் இருந்தே வெளியேற்றி விட்டதாக, எண்ணி 24 மணி நேரத்தில் அறிவிக்க வேண்டும்... இல்லையென்றால், முகமது நபியை பற்றிய கார்டூன் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும். இதனால் ஏற்படும் இந்து-முஸ்லிம் பிரச்சனைக்கு முழுக்க முழுக்க திக, திமுக, இஸ்லாமிய கும்பலே முழு பொறுப்பாகும்" என்று பதிவிட்டிருந்தார்.
கொந்தளிப்பு
இந்த பதிவு இஸ்லாமியர்களிடையே மட்டுமல்லாமல், சோஷியல் மீடியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. விழுப்புரம் தாலுகா போலீசில் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' தொகுதி தலைவர் ரியாஸ் அலி, வர்மாவை (சுரேந்தர்) கைது செய்ய கோரி, புகார் அளித்தார். இதைதவிர, அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் சார்பிலும், முகமது ரஃபி என்பவர், விழுப்புரம் எஸ்பி ஆபிசில் புகார் தந்தார்.
கைது
இந்த புகார்களின் பேரில், டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீசார் வர்மாவை கைது செய்தனர்.. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, இந்து மக்கள் கட்சி மாநில இணை பொதுச் செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் சிலர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். கைதான வர்மா, விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.