கமகம கம்பங் கூழ், சுவையான ஊறுகாய்.. அடடே.. இப்படியும் கல்யாண சாப்பாடு போடலாமா!
உளுந்தூர்பேட்டை திருமணத்தில் கூழ், ஊறுகாய் பரிமாறப்பட்டது.
விழுப்புரம்: இப்படிகூட கல்யாணத்தை பண்ணலாம் என்று நிரூபித்து இருக்கிறார் களமருதூர் கிராமத்து இளைஞர் தினேஷ்!!
கல்யாணம் என்றாலே தடபுடல் விருந்து, அறுசுவை விருந்து என்பதுதான் காலங்காலமாக நீடித்து வரும் சமாச்சாரம். வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் இந்த விஷேத்துக்கு செலவு செய்யாம, வேற எதுக்கு செலவு செய்யறது? என்கிற இயல்பு மனநிலைதான் இவ்வளவு நாளும் நீடித்து வந்தது. அதற்காகதான் ஏழையாகவே இருந்தாலும் கல்யாணத்தன்று கடன் வாங்கியாவது சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் இன்னமும் இருக்கிறது.
ஒரு கிலோ கோழிக்கறியை சாப்பிட்டு விட்டு.. மாணவி கொலை.. ஆத்தூர் பயங்கரம் !
யதார்த்த நடைமுறை
ஆனால் இப்படி கடன் வாங்கி விருந்து வைத்தாலும் அதையும் ஏதாச்சும் குறை சொல்லிட்டு போற சொந்தக்காரங்க கூட்டம் இருக்கதான் செய்கிறது. இதுபோன்ற ஒரு நடைமுறையை உடைத்தெறிந்திருக்கிறது ஒரு விவசாய குடும்பம். இதற்கு காரணம் சாஸ்திரம், சம்பிரதாயம், பழக்கவழக்கத்தை மதிக்க கூடாது என்ற மனப்பான்மை இல்லை.. யதார்த்தமாக யோசித்து நிறைவாக விருந்து தர முயன்றிருக்கிறார்கள்.
கூழ்... ஊறுகாய்
உளுந்தூர்பேட்டையை அடுத்த களமருதூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்தான் தினேஷ். இவர் ஒரு போட்டோகிராபர். இவருக்கும் மீனா என்பவருக்கும் நேற்று முன் தினம், அவர்கள் ஊரிலேயே கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும், அறுசுவைக்கு பதிலாக கம்பு மற்றும் கேழ்வரகுக் கூழ் கொடுக்கப்பட்டது.
அசந்து விட்டார்கள்
பொதுவா காலைல தாலி கட்டினதும், இட்லி, பூரி, பொங்கல், கேசரி.... இப்படிப்பட்ட ஐட்டங்கள்தான் நமக்கு பரிமாறப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு பாரம்பரிய உணவாக கூழ் கொடுக்கப்பட்டதை பார்த்ததும் எல்லோருமே அசந்துவிட்டார்கள். இதற்கு சைடு டிஷ் என்ன தெரியுமா? மாங்காய், இஞ்சி மற்றும் பூண்டு ஊறுகாய், பச்சைமிளகாய், அரிசி வத்தல்தான்!!
ஆசைதீர குடித்தார்கள்
இப்போ இருக்கிற காலகட்டத்துல பெரும்பாலானோருக்கு சர்க்கரை, B.P., போன்றவை இருப்பது சாதாரணமாக ஆகிவிட்டது. கோடி கோடியா சொத்து வெச்சிருந்தாலும் சர்க்கரைநோய்-ன்னு வந்துட்டா களி, கூழ், சப்பாத்திதான் சாப்பிடனும்னு எழுதப்படாத விதி ஆயிடுச்சு. இந்த கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவரும் கொடுக்கப்பட்ட கூழை ஆசை தீர குடித்தார்கள். சிலர் இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கியும் குடித்தார்கள்.
கூழ் - ஊறுகாயுடன் செல்பி
இதில் ஹைலைட் என்னவென்றால்,குழந்தைகளும் இதை வாங்கி குடித்ததுதான். மாரியம்மன் கோயில்ல மட்டும்தான் கூழ் ஊத்துவாங்கன்னு நினைச்சிட்டு இருக்கிற இளம்வயது பிள்ளைகளும் இந்த விருந்தை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். கல்யாணத்துல கூழும் கையுமாக இளசுகள் எல்லாம் செல்ஃபி மயம்தான். இப்படி ஒரு செல்ஃபியை யாரும் எடுத்து கொண்டிருக்க மாட்டார்கள்.
பாரம்பரிய உணவு
இதுகுறித்து மாப்பிள்ளை தினேஷ் சொல்லும்போது, "நாகரிகம் என்ற பெயரில் எல்லாத்தையுமே இழந்துட்டோம். நம்ம பாரம்பரிய உணவும் நம்மைவிட்டு போயாச்சு. அதனாலதான் சர்க்கரை, BP நமக்கு வர ஆரம்பிச்சுடுச்சு. நம்முடைய பாரம்பர்ய உணவுகளையே டப்பாக்களில் அடைச்சு விற்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், என் கல்யாணத்துக்கு நம்ம பாரம்பர்ய உணவான கூழைதான் விருந்தாக தரணும்னு முடிவு பண்ணினேன்.
மீட்டெடுக்கலாம்
எல்லோரும் இந்த முயற்சியை பாராட்டினாங்க. இதை பார்த்த என் நண்பர்களும் அவங்க கல்யாணத்துக்கு இதுபோலவே செய்ய போறதா சொல்லிட்டு போயிருக்காங்க. இப்படி நாம எல்லோருமே செய்தா, பாரம்பர்ய உணவை திரும்பவும் மீட்டெடுக்கலாம், மூழ்கி கொண்டிருக்கும் விவசாயத்தையும் தலைநிமிர செய்யலாம்" என்று கூறினார். சபாஷ் மாப்பிள்ளை!!