மறைந்த ராதாமணி சிறந்த பாடமாக விளங்குகிறார்.. நினைவேந்தல் நிகழ்ச்சயில் ஸ்டாலின் புகழுரை
விழுப்புரம்: திமுக என்ற புலி சட்டமன்றத்தில் பதுங்குவது பாய்வதற்காக தான் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பத்தில் விக்கிரவாண்டி எம்எல்ஏ-வாக இருந்து மறைந்த கு.ராதாமணியின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் கு.ராதாமணியின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர்லெ்வம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர் கு.ராதாமணி என புகழஞ்சலி செலுத்தினார். ராதாமணியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் பேசினார்.
கு.ராதாமணியின் செயல்பாடுகள் திறம்பட அனைவராலும் பாராட்டப்படக் கூடிய வகையில் எப்போதும் அமைந்திருக்கும். இதனால் மக்களுடைய மனங்களிலே சிறப்புக்குரிய இடத்தை கு.ராதாமணி பெற்றிருந்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.
நம் முன் தற்போது படமாக மட்டுமல்ல ஒரு சிறந்த பாடமாகவும் ராதாமணி விளங்கி கொண்டிருப்பதாக, ஸ்டாலின் புகழுரைத்தார். ஓராண்டு, ஈராண்டு அல்ல 33 ஆண்டு காலம் ஒன்றிய கழகத்தின் செயலாளராக இருந்துள்ளார் ராதாமணி. இதுவே பெரும் சாதனை தான் என பாராட்டினார்.
ஏனெனில் எம்எல்ஏ மற்றும் எம்பி-யாவது மக்களின் வாக்குகளை பொருத்தது. ஆனால் ஒரு இயக்கத்தில் கிளை செயலாளராவது, பின்னர் பல ஆண்டுகள் இயக்க பொறுப்புகளில் நீடிப்பது என்பதெல்லாம் மிக கடினமாக விஷயம் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்துவிட்டு, திமுக பதுங்குவதாக கூறுகின்றனர். நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையற்றது என்பதால் தான் வாபஸ் பெறப்பட்டது என கூறினார். புலி பதுங்குவது பாய்வதற்குதான். பாய வேண்டிய நேரத்தில் பாயும் என்றார்