எந்த சமுதாயத்தையும் தப்பா பேசலைங்க... என் டார்கெட் அந்த குடும்பம்தான்... சி.வி சண்முகம் விளக்கம்!
விழுப்புரம்: டி.டி.வி தினகரன் குறித்து பேசியபோது அவர்களது குலத்தொழில் ஊத்திக் கொடுப்பது என்று தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தான் அப்படி சொல்லவில்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்தார்.
Recommended Video
நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்றும் சி.வி.சண்முகம் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள காரனை கிராமம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மொகளார் கிராமத்திலும் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். அப்போது உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுரு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:- நான் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், டி.டி.வி தினகரன் குறித்து பேசியபோது அவர்களது குலத்தொழில் ஊத்திக் கொடுப்பது என்று பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எங்கள் பகுதி பேச்சு வழக்கில் நான் பேசியது அந்த தனிப்பட்ட குடும்பத்தினரை மட்டுமே குறிக்கும்.
ஊத்தி கொடுக்கும் குலம் என்று நான் கூறியது ஒரு சமுதாயத்தை பேசியதாக சிலர் தவறாக புரிந்து கொண்டனர். நான் அதுபோன்று எதுவும் பேசவில்லை. அவ்வாறு நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று சி.வி.சண்முகம் கூறினார்.