அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் வெற்றி நடை போடவில்லை; வெற்று நடைதான் போடுகிறது... சொல்வது மு.க.ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி: கோடிகளைக் கொட்டி பொய்யான விளம்பரங்களைக் கொடுக்கும் அதிமுக ஆட்சியில் தமிழகம் வெற்றிநடை போடவில்லை; வெற்று நடைபோடுகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தை கெத்து நடை போட வைக்க தி.மு.க ஆட்சியால் மட்டுமே முடியும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்றைய தினம் நாம் பார்க்கும் நிறுவனங்கள், திட்டங்கள், கொள்கைகள், நன்மைகள் ஆகிய அனைத்திலும் முக்கால் பங்கு கருணாநிதியால் உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இங்கு ஆட்சி இல்லை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகரில் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:- இன்றைய தினம் நாம் பார்க்கும் நிறுவனங்கள், திட்டங்கள், கொள்கைகள், நன்மைகள் ஆகிய அனைத்திலும் முக்கால் பங்கு கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு நீங்கள் பார்க்கும் ஆட்சி உங்கள் கவலைகளைத் தீர்க்கும் ஆட்சியாக இல்லை. உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆட்சியாக இல்லை. உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் ஆட்சியாக இல்லை. மொத்தத்தில் இது ஆட்சியாகவே இல்லை.
வேதனை விளம்பரங்கள்
வெற்று விளம்பரங்களின் மூலமாக - அரசாங்கப் பணத்தை வைத்து முத்துக்குளிக்கும் ஆட்சியாக இருக்கிறது. அ.தி.மு.க.வினருக்கு சொல்லிக் கொள்வதற்கு எந்தச் சாதனையும் இல்லை. அவர்கள் சாதனைகள் செய்யத் தெரியாது. அவருக்கு ஊழல் செய்யத்தான் தெரியும். அல்லது ஊர்ந்து போகத் தெரியும். பழனிசாமி கொடுப்பது சாதனை விளம்பரங்கள் அல்ல. வேதனை விளம்பரங்கள். அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு பணிகள் திமுக ஆட்சியில் செய்யப்பட்டவை.
சொல்ல முடியாது
அதற்கும் சேர்த்துச் உரிமை கொண்டாடுகிறார் பழனிசாமி. பொதுவாக கல்வி வளர்ச்சி, கல்வித் தரம், சமூக வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், வாழ்க்கைத்தரம் ஆகியவை எல்லாம் காலம் காலமாக வளர்ந்து வருவதன் அடிப்படையில்தான் கணக்கீடுகள் செய்யப்படும். இவற்றை அந்தந்த ஆண்டின் வளர்ச்சியாகச் சொல்ல முடியாது. கால் நூற்றாண்டு கால வளர்ச்சியை எல்லாம், தனது நான்காண்டு கால வளர்ச்சியாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் பழனிசாமி.
தடுப்பூசி
தடுப்பூசியை இலவசம் என்கிறார். அரசாங்கத்தால் போடப்படும் அனைத்துத் தடுப்பூசிகளும் இதுவரை இலவசமாகத்தான் போடப்பட்டது. 2 ஆயிரம் மினி கிளினிக் என்று சொன்னார். பழைய கிளினிக்குகளுக்கு பச்சை பெயிண்ட் அடித்துள்ளார் பழனிசாமி! அரசுப் பள்ளி மாணவர்க்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதாகச் சொல்கிறார். மூன்றாண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் போனதற்கு பழனிசாமிதானே காரணம்?
காவிரி உரிமை இழந்தோம்
மருத்துவக் கல்லூரிகளைக் கடைசி காலத்தில் உருவாக்கினாரே தவிர முன்கூட்டியே உருவாக்கி கல்லூரிகளைத் திறந்துவிடவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் இவை திறக்கப்படும். தி.மு.க. ஆட்சியில்தான் இவை திறக்கப்படும்.காவிரியில் நமது உரிமையை பழனிசாமியால் இழந்தோம். காவிரி ஆணையமோ, மேலாண்மை வாரியமோ அமைக்கப்படாமல், மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் துணை செக்ஷனாக காவிரியை மாற்றிவிட்டார் பழனிசாமி!
கொரோனா கட்டுப்படுத்த முடியவில்லை
டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றியதாகச் சொன்னாரே தவிர, ஹைட் ரோகார்பன் திட்டங்களை பழனிசாமி தடுக்கவில்லை! தனியாரிடம் கொள்ளை விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிவிட்டு மின் மிகை மாநிலமாக தம்பட்டம் அடிக்கிறார் பழனிசாமி! கொரோனாவைக் கட்டுப்படுத்த அவரால் முடியவில்லை. 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படவும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரது இறப்புக்கும் காரணமான ஆட்சி தான் இந்த அ.தி.மு.க. ஆட்சி! உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து சொல்லப்படுவது அனைத்தும் பொய்யான தகவல்கள். அது குறித்து நான் வெள்ளை அறிக்கை கேட்டேன். இதுவரை பழனிசாமி தரவில்லை.
பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும்
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று கோவையையும் சென்னையையும் சொல்லிக் கொள்கிறார் பழனிசாமி. பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா பழனிசாமி ஆட்சியைப் பற்றி சொல்வதற்கு? தேசிய அளவில் ஆடைகள் உற்பத்தியில் முதலிடத்திலும், துணி உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் தனது ஆட்சி இருப்பதாக பழனிசாமி சொல்கிறார். ஆனால் உண்மை என்ன என்பதை கடந்த 9 ஆம் தேதி 'தினமணி' நாளிதழ் எழுதிவிட்டது. பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் சரிவுகளை விரிவாக எழுதி இருக்கிறார்கள். அதுதான் உண்மையான நிலவரம்.
ஊழலில் முதலிடம்
புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இருந்த வேலைவாய்ப்புகளையும் பலரும் இழந்துள்ளார்கள். இதற்கு மாறான பொய்களைத் தான் கோடிகளைக் கொட்டி விளம்பரமாக பழனிசாமி கொடுத்து வருகிறார். இவராக அதில் முதலிடம் இதில் முதலிடம் என்று சொல்லிக் கொள்கிறாரே தவிர, இவர் ஊழலில்தான் முதலிடம்! அது ஒன்றுதான் உண்மை!இவை எல்லாம் என் சாதனைகள் என்று பழனிசாமி பட்டியல் போடுகிறார். மறுநாளே இதற்கெல்லாம் பணம் ஒதுக்கியது நான் தான் என்று பன்னீர்செல்வம் விளம்பரம் கொடுக்கிறார்.
வெற்று நடை போடும் தமிழகம்
இவர்கள் கொடுக்கும் விளம்பரச் சண்டையைப் பார்க்கும் போது, 'அந்தப் பக்கமா போய் விளையாடுங்கப்பா' என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இது வெற்றி நடை போடும் தமிழகம் அல்ல; வெற்று நடை போடும் தமிழகம்!வெற்று நடை போடும் தமிழகத்தை எல்லா வகையிலும் கெத்து நடை போடும் தமிழகமாக மாற்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால் மட்டுமே முடியும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.