பாஜக உடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றுப்போனோம்.. அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருச்சிற்றம்பலத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சண்முகம், பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் இந்த தேர்தலில் தோற்று போனோம் என வேதனை தெரிவித்துள்ளார். வெளிப்படையாக பாஜகவை விமர்சித்து அமைச்சர் சிவி சண்முகம் பேசிய கருத்து கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. இதில் தேனியை தவிர 37 இடங்களிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. இதனால் அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் பலர் தோல்விக்கு பல்வேறு காரணங்களை கூறி புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசினார்.
பாஜக கூட்டணி
அவர் பேசுகையில், "நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிக தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தோம். இதில் நாங்கள் தோற்றுவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.இந்த தேர்தலில் திமுகவுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. மத்தியில் யார் ஆள வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதே மக்கள் தமிழகத்தில் அதிமுகதான் ஆள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள்
முஸ்லீம் வாக்குகள் இழப்பு
அதிமுக வெற்றிப் பெற்றால் ஆடம்பரமாக கொண்டோடுவதோ, தோல்வி அடைந்தால் சோர்ந்து விடுவதுமில்லை. நான் வெளிப்படையாக சொல்கிறேன், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை . நாங்கள் இந்த தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததன் விளைவாக ஒரு சமுதாயத்தின் வாக்குகளை குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக இழந்து விட்டோம்.
கூட்டணியில் தவறு
இவை மோடிக்கு எதிரான வாக்குகள்தான். அதிமுக இதில் தோல்வியை சந்தித்து விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 40 வாக்குகள் சிறுபான்மையினர் வாக்குகள். அதனை அப்படியே இழந்து விட்டோம். இதனால் வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறியது. கூட்டணியில் செய்த தவறை திருத்திக் கொள்கிறோம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக செயல்படும்.
பொய் சொல்லி திமுக வெற்றி
2001-2006 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதிப்பு கூட்டு வரியை துணிச்சலோடு எதிர்த்தவர் ஜெயலலிதா. இன்றைக்கு அது ஜி.எஸ்.டி.யாக உள்ளது. நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் கொண்டு வந்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி. பொய்யை சொல்லி இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்று திமுக கனவு காண்பது ஒருபோதும் நிறைவேறாது" இவ்வாறு கூறினார்.
அதிமுகவில் குழப்பமில்லை
அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூறும் கருத்துகளை பரிசீலித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார். அதிமுகவில் எந்த குழப்பமும் இன்றி ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.