உளறல் அமைச்சர்கள்.. முதல்வர் அவரா? நானா? - விழுப்புரத்தில் ஸ்டாலின் பரபர
விழுப்புரம்: அதிமுக ஆட்சியின் அமைச்சர்கள் உளறுவாயர்கள். இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து கோட்டையை மீட்பதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம் காணை கூட்டத்தில் திமுக சார்பில் விழுப்புரம் விக்கிரவாண்டி வானூர் திருக்கோவிலூர் தொகுதிகளுக்கு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சார கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "மூன்றாம் கட்டமாக தொகுதி வாரியாக சென்று மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்து வருகிறேன். ஒட்டுமொத்த மக்களும் இந்த ஆட்சி நடக்கவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் குறைகளை தெரிவித்து வருகின்றனர். மூன்று மாத காலத்தில் திமுக ஆட்சி வந்ததும் மக்கள் குறைகள், கவலைகள் தீர்க்கப்படும்.
இனி வேலை இல்லை
குறைதீர்க்கும் மேலாண்மைத் திட்டம் கொண்டுவரப்போவதாகவும், அதற்கு போன் செய்தால் போதும் என்றும் அதனால் ஸ்டாலினுக்கு இனி வேலை இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். கடந்த நான்காண்டு காலமாக பழனிசாமிக்கு இந்த புத்தி வரவில்லை. இந்த ஸ்டாலின் சொன்ன பிறகு தான் புத்தி வருகிறதா? அப்படி என்றால் யார் முதலமைச்சர்? அவரா? நானா?
கண்டுபிடிக்க முடியாது
பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் தனது ஆட்சியில் எந்தக் குறையும் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். பழனிசாமி ஆட்சியின் குறைகளைக் கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை! கண்ணை மூடிக் கொண்டு இருந்தாலே கண்டுபிடித்துவிடலாம்!
ஆதாரம் உள்ளது
விழுப்புரத்தில் கட்டிய தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்தது. அது அணை அல்ல, சுவர் தான் என்கிறார் சட்ட அமைச்சர் சண்முகம். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தரமற்ற அணையை கட்டிய ஒப்பந்ததாரரை கைது செய்யாதது ஏன்?
ஏன் தொடங்கவில்லை?
அமைச்சர் சிவி சண்முகம் மரியாதையாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஆட்சியின் போது அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட சீவி சண்முகம், இந்த மாவட்டத்திற்கு முதலில் என்ன செய்திருக்கிறார்? எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது விழுப்புரம் நகரத்துக்கு விரிவாக்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் வரும் என்றீர்கள். டெண்டர் விட்டு ஒன்றரை ஆண்டாகி விட்டது. ஏன் இதுவரை பணிகள் தொடங்கவில்லை?
கோட்டையை மீட்கும் தேர்தல்
விழுப்புரம் நகராட்சியையாவது, சிறப்புநிலை நகராட்சி ஆக்கினீர்களா? அதுவும் இல்லை! பத்து ஆண்டுகள் ஆகியும் விழுப்புரத்துக்கு சுற்றுவட்ட சாலை வந்ததா? இல்லை! இங்கு மந்திரிகள் உளறுவாயர்கள். இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து கோட்டையை மீட்பதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல். இவர்கள் பொதுமக்களின் குறைகளை கேட்கவும் மாட்டார்கள். பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் மாட்டார்கள். இவர்கள் மக்களைப் பற்றி நினைக்கவும் மாட்டார்கள்" என்றார்.