தைலாபுரத்துக்கு சென்று நன்றி கூறிய சி.வி.சண்முகம்... உற்சாகமாக வரவேற்ற ராமதாஸ்
விழுப்புரம்: விக்ரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் கூட்டணிக் கட்சித் தலைவரான பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அவருடன் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகமும் சென்று ராமதாஸை சந்தித்தார்.
உற்சாகமாக அவர்கள் இருவரையும் வரவேற்ற ராமதாஸ் இனிப்புகளை கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வரலாறு காணாத வெற்றி.. சசிகலா இதை விரும்புவாராம்.. முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னது யார் தெரியுமா?
நேரில் சந்திப்பு
விக்ரவாண்டியில் அதிமுக பெற்ற வெற்றிக்கு, அந்தத் தொகுதியில் உள்ள பாமகவின் வாக்குவங்கி தான் முக்கியக் காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ராமதாஸை சந்தித்து நன்றி கூற அமைச்சர் சி.வி.சண்முகம் நேரம் கேட்டுள்ளார். பிற்பகல் சந்திக்க அவருக்கு நேரம் தந்ததை அடுத்து முத்தமிழ்ச்செல்வனை அழைத்துக்கொண்டு தைலாபுரம் சென்றார்.
மகிழ்ச்சி
அமைச்சர் சி.வி.சண்முகத்தையும், முத்தமிழ்ச்செல்வனையும் புன்னகை பூத்த முகத்தோடு வரவேற்ற ராமதாஸ், இனிப்பை கொண்டுவரச்சொல்லி அவர்களுக்கு வழங்கினார். மேலும், ராமதாஸிடம் முத்தமிழ்ச்செல்வன் ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார்.
எதிர்பார்த்த வெற்றி
பிறகு செய்தியாளர்களையும், புகைப்பட நிருபர்களையும் வெளியேற்றிவிட்டு ராமதாஸ் மனம் விட்டு பேசியுள்ளார். அப்போது இந்த வெற்றி நாம் எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், திமுகவுக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தை ஆமோதித்த அமைச்சர் சி.வி.சண்முகம், இனி நமக்கு தொடர்ந்து வெற்றி தான் எனக் கூறியுள்ளார்.
விஜயகாந்துடன் சந்திப்பு
தீபாவளி பண்டிகை முடிந்தபின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முத்தமிழ்ச்செல்வன் நன்றி கூறுவார் எனக் கூறப்படுகிறது. அடுத்தவாரம் 29-ம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ள நிலையில் அதற்கு முன்பாக 28-ம் விஜயகாந்துடன் சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.