நீயா நானா.. விக்கிரவாண்டி, நாங்குநேரி.. அனல் கிளப்பிய பிரச்சாரம்.. 6 மணியோடு ஓய்ந்தது
இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது
Recommended Video
விழுப்புரம்: நீயா.. நானா.. ஒத்தைக்கு ஒத்தை பார்த்துவிடலாம்.. என்று அதிமுகவும், திமுகவும் களமிறங்கிய இடைத்தேர்தலின் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெற்றது.. இன்றே கடைசி நாள் பிரச்சாரம் என்பதால், நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகள் பரபரத்து காணப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் வரும் 21-ம் தேதி, அதாவது திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடக்க போகிறது.
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட பலரும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனும், திமுக வேட்பாளர் புகழேந்தி உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.
வெற்றி - தோல்வி
இந்த இரு தொகுதிகளின் தேர்தல் வெற்றியும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிகளை யார் அள்ள போகிறார்களோ, அவர்களுக்கு வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும் என்று இரு தரப்பு கட்சியுமே நம்புகிறார்கள். அதனால்தான், 2 வாரங்களும் தொகுதிக்குள் அனல் தெறித்தது.. பிரச்சார நெடி வெடித்தது..
சுவிஸ் வங்கி
ஜெயலலிதா இறப்புக்கு காரணமே இவர்தான் என்று ஒரு தரப்பும், சுவிஸ் பேங்கில் பணம் உள்ளது இன்னொரு தரப்பும் மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இவர்களுடன் அந்தந்த கூட்டணி கட்சி தலைவர்களும் கைகோர்த்து இணைந்து பிரச்சாரம் செய்தனர்.
கந்தசாமி
இந்த இரு ஜாம்பவான்களுக்கு இடையே தனி நபராக களம் புகுந்து வழக்கம்போல் ஆச்சரியத்தை தந்துவருகிறது நாம் தமிழர் கட்சி.. கந்தசாமி என்ற சமூக போராளி களம் காண்கிறார். இவர்களை தவிர அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் டைரக்டர் கௌதமன் உட்பட பலரும் தேர்தலை சந்திக்க உள்ளனர். எவ்வளவுதான் பிரச்சார பலம் இருந்தாலும், பணப்பட்டுவாடாவும் இங்கு புழங்கியதாகவே புகார்கள் வெளிவரவே செய்தன. இரு பெரும் கட்சிகள் வாக்குக்கு பணம் என்பதையும் பயன்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு
இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் இத்தொகுதிகளின் பிரச்சாரம் ஓய்ந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவுக்கான பணிகளை அதிகாரிகள் விறுவிறுப்பாக மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். இதைதவிர, துணைநிலை ராணுவம் உள்ளிட்டோரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர்.
முன்னோட்டம்
யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை உறுதியாக சொல்ல முடியாத சூழல், இரு தொகுதிகளிலும் ஏற்பட்டுள்ள நிலையில், 2021-ல் நடக்க போகும் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதற்கான வீரியம்தான் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்றும் தொகுதிகளில் தென்பட்டது.