நீட் எனும் அரக்கன்.. தமிழகத்தில் மற்றொரு மாணவி தற்கொலை.. இரு நாளில் 3ஆவது உயிர் பலி!
Recommended Video
விழுப்புரம்: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸா மாநிலம் தவிர்த்து நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது.
இந்த தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவக் கனவு தகர்ந்து போனதை அடுத்து நேற்றைய தினம் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்கள் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை மாணவி வைஷியா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் ரிதுஸ்ரீ பிளஸ் 2 தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் நீட்டில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அது போல் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியாவும் நீட் தோல்வியால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இரு மாணவிகள் அடுத்தடுத்த பலியால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நீட் தேர்வு தோல்வியால் தமிழக மாணவிகள் மரணம்.. மத்திய-மாநில அரசுகளின் பச்சை படுகொலை.. சீறும் சீமான்
இந்த நிலையில் நீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடுகுப்பத்தைச் சேர்ந்தவர் மோனிஷா.
இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்தார். நீட் தேர்வை எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் அவர் தோல்வி அடைந்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு நாட்களில் நீட் எனும் அரக்கன் 3 மாணவிகளின் உயிரை குடித்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.