எங்கெங்கும் பழங்கால பானை ஓடு சிதறல்கள்.... வடதமிழகத்தின் கீழடியா கல்யாணம்பூண்டி?
Recommended Video
விழுப்புரம்: தமிழரின் தொன்மை வரலாற்றை மெய்ப்பித்திருக்கும் கீழடியில் கிடைத்த பழங்கால பானை ஓடுகளின் சிதறல் குவியல்கள் வடதமிழகத்தில் கல்யாணம்பூண்டி கிராமத்திலும் நிறைந்து காணப்படுகிறது.
கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் மூலம் கிமு 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் உச்சநாகரிக வாழ்வியலை வாழ்ந்தது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் பெருநிலப்பரப்பானது ஆதி மனிதன் தோன்றிய 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து படிப்படியான வாழ்நிலையை கடந்து வந்திருக்கிறது.
இந்த ஒவ்வொரு கால கட்டத்துக்குமான சான்றுகள் தமிழ்நிலப் பரப்பின் ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்து வருகின்றன. கீழடியில் கிமு6-ம் நூற்றாண்டில் வைகை நதிக்கரையில் வளமான நகர நாகரிகத்துடன் தமிழர்கள் கோலோச்சி வாழ்ந்த மெச்சத்தகுந்த பெருமையை சொல்கிறது.
இதேபோன்ற அகழாய்வுகள் வடதமிழகத்தில் விழுப்புரம்- செஞ்சி சாலையில் உள்ள கல்யாணம்பூண்டி கிராமத்திலும் நடத்தப்பட வேண்டும் என்பது தமிழார்வலர்களின் கோரிக்கை. இந்த கிராமத்தில் பழங்கால பானை ஓடுகள் குவியல் குவியலாக சிதறிக் கிடக்கின்றன; வாய் அகன்ற, குறுகிய தடித்த மெல்லிய ஓடுகள் ஏராளமாக கிடைத்துள்ளன என்கிறார் ஆய்வாளர் கோ. செங்குட்டுவன்.
கடந்த சில ஆண்டுகளாக இணையவெளியில் கல்யாணம்பூண்டி குறித்த கருத்துகள் பரப்பப்பட்டாலும் தற்போது கீழடியின் வெளிச்சத்திலாவது இந்த கிராமத்துக்குள் புதைந்து கிடக்கும் ஆதிவரலாறு வெளிக்கொணரப்பட வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.