விழுப்புரத்தில் 52 வயது தலைமை ஆசிரியர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவுக்கு 2ஆவது பலி
விழுப்புரம்: விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 52 வயது முதியவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் இன்று காலை இறந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2,070 போ் கண்டறியப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உடல் நலம் பாதிப்புள்ள 53 போ் கொரோனா வைரஸ் தொற்று இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதி உள் நோயாளிகளாக விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற மத வழிபாட்டு மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்தனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 64 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று ஊர் திரும்பியது தெரியவந்தது.
3 பேருக்கு கொரோனா
இவர்களில் 55 பேர் அடையாளம் காணப்பட்டு, 25 பேர் விழுப்புரம் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், 30 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், கமலா நகா், முத்தோப்பு, சித்தேரிக்கரை பகுதிகளைச் சோ்ந்த 3 பேருக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
மருத்துவமனை
இதனிடையே நேற்று மாலை மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த முத்தோப்பு பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபர், இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பலி எண்ணிக்கை 2
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட் 19 பாசிட்டிவில் 52 வயது ஆண், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு இவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என குறிப்பிட்டுள்ளது.
முதல் நபர் மதுரையில் பலி
விழுப்புரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. மதுரையில் அண்ணா நகரில் கடந்த 24-ஆம் தேதி 52 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது விழுப்புரத்தில் 2ஆவது நபர் உயிரிழந்துள்ளார்.
சிதம்பரத்தில் ஒருவர் மரணம்
இதற்கிடையே, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உளுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் நீண்ட நாட்களாக சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி மூச்சு திணறல் அதிகமானதால், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அந்த நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதற்காக எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.