இரட்டை இலையில்.. மாம்பழத்தோடு.. முரசுகொட்டி விக்கிரவாண்டியில் முதல்வர் 3 நாள் பிரச்சாரம்
Recommended Video
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வனை ஆதரித்து இன்று தொடங்கி மூன்று நாளைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், தி.மு.க. சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் சார்பில் கந்தசாமி உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.
பழனிச்சாமி பிரச்சாரம்
விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சி வேட்பாளர்களும் தங்கள் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வனை ஆதரித்து இன்று தொடங்கி மூன்று நாளைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ராதாபுரம்
முதல்கட்டமாக விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் பிரசாரத்தை தொடங்கி, ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி வி.சாத்தனூர், டி.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
காணையில் பிரச்சாரம்
அதன்பிறகு இரண்டாம் கட்டமாக 16-ந் தேதி மாலையில் காணை பகுதியில் பிரசாரத்தை முதல்வர் தொடங்குகிறார். மாம்பழப்பட்டு, அரியலூர், திருக்கை, கெடார், சூரப்பட்டு, திருவாமாத்தூர் ஆகிய இடங்களில் அன்றே பிரச்சாரம் செய்கிறார்.
18ம் தேதி பிரச்சாரம்
மூன்றாம் கட்டமாக 18-ந் தேதி விராட்டிக்குப்பம், தும்பூர், முட்டத்தூர், பனமலை, அன்னியூர், கடையம் ஆகிய வழித்தடங்களில் திறந்த வேனில் சென்று அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
கடும் சவால்
முதல்வர் பழனிச்சாமியின் இந்த பிரச்சாரத்தில் அதிமுகஅரசின் சாதனைகளை கூறி வாக்கு கேட்பார் என்று தெரிகிறது. மேலும் இந்த தொகுதியில் 2016ம் ஆண்டில் ஜெயலலிதா உயிருடன் இருந்தே போதே திமுக வசம் இருந்த தொகுதி என்பதால் இதை கைப்பற்றி அ.தி.மு.க வலிமையாக இருக்கிறது என்பதை நிரூபிக்க முதல்வர் விரும்புகிறார். இதேபோல் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்பதற்காவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
நீயா நானா
விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவின் ஆதரவு மற்றும் தேமுதிகவின் ஆதரவு இந்த முறை கூடுதலாக இருப்பதால் திமுகவுக்கு அதிமுக கடும் போட்டி அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் நாங்குநேரியிலும் அதிமுக கடும் சவாலை தரும் என்பதால் நிச்சயம் இந்த இடைத்தேர்தல்கள் அதிமுக திமுகவுக்கு இடையே நீயா நானா போட்டியை ஏற்படுத்தி உள்ளது.