பொறுத்தது போதும் பொங்கி எழு! சுண்டியிழுத்த பிரியாணி வாசம்! ரணகளமான ஓ.பி.எஸ்.நிகழ்ச்சி!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில், அவர் வருவதற்கு
முன்பாகவே பிரியாணிக்காக அடித்துக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
ஒரு தேக்ஸா பிரியாணியை 10 நிமிடத்தில் போட்டி போட்டு காலி செய்ததுடன் அங்கு
வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தென்னங்கன்றுகளையும் முட்டி மோதி அள்ளிச்சென்றனர்.
இதனிடையே ஓ.பி.எஸ். வருகைக்கு முன்பாகவே இந்த களேபரங்கள் நடந்ததால்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நொந்து போனார்கள்.
5 ஆண்டுகளில் விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள்! சட்டசபையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நம்பிக்கை
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாலப்பாடியில் அதிமுக பிரமுகர்
ஒருவரது பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை
தொடர்ந்து நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, மரக்கன்றுகள்
உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. இத்தோடு அந்த விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய
விருந்தாக பிரியாணியும் தயார் செய்யப்பட்டது.
பிரியாணி வாசம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விழா நடைபெறும் இடத்துக்கு
வருவதற்கு முன்பாகவே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கமகமக்கும் பிரியாணி
வாசம் சுண்டியிழுத்ததால் இருக்கைகளை விட்டு எழுந்து நேராக பிரியாணி
சமைக்கும் இடத்தில் அங்கிருந்தவர்கள் குவிந்தார்கள். ஓரிருவர் எனக்கு
பிரியாணியை பொட்டலம் போட்டு கொடுங்க வீட்டுக்கு கொண்டுப் போகிறேன் எனக்
கேட்டு ஆரம்பித்து வைக்க, வரிசையாக அதன்பின்னர் வந்தவர்களும் பொட்டலம்
போட்டுத் தருமாறு நச்சரிக்கத் தொடங்கினர்.
மனம் நொந்து
ஒரு கட்டத்தில் பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்ற வசனத்திற்கேற்ப
ஆளாளுக்கு பிரியாணியை அள்ளிக்கொண்டும் அங்கு வைக்கப்பட்டிருந்த
மரக்கன்றுகளை தூக்கிக்கொண்டும் ஜூட் விடத் தொடங்கினர். இவ்வளவு
களேபரங்களும் ஓ.பி.எஸ். வருகை தருவதற்கு முன்பாகவே நடந்ததால் நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் மனம் வெறுத்ததோடு மிகவும் நொந்தும் போனார்கள்.
இதெல்லாம் சகஜம்
அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் வழக்கமான
ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. இதனிடையே பிரியாணியோடும், மரக்கன்றுகளோடும்
பலரும் எஸ்கேப் ஆகியிருந்த நிலையில் சாவகாசமாக வந்து பெட்ரோல் பங்க்
திறப்பு விழாவில் கலந்துகொண்டார் ஓ.பன்னீர்செல்வம்.