இன்னும் "பெருமாள்" செஞ்சியை விட்டு நகரலை.. நகர முடியலை.. காரணம் ஒரு குட்டி பாலம்!
Recommended Video
செஞ்சி: இன்னமும் பெருமாள் சிலை செஞ்சியில்தான் இருக்கிறது. இதோ இந்த பாலம்தான் கோதண்டராமர் சிலைக்கு தடையாக உள்ள பாலம்!
வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.
அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள்.
மக்கள் போராட்டம்
வெயிட் தாங்காமல் டயர் மண் சாலையில் சிக்கி கொண்டது. அதோடு 6 டயர்களும் டமார் டமார் என வெடித்தன. பின்னர் திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுப்பேட்டை அருகே வந்தபோது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகளை, வீடுகளை இடித்து சென்றதால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்திலேயே குதித்து விட்டனர்.
அனுமதி வழங்கவில்லை
பிறகு சென்ற வாரம் செஞ்சி கோட்டை அருகே சிலை வந்தது. ஆனால் செஞ்சியில் கோட்டை சுற்று சுவருக்கு இடையே செல்லும் மிகவும் சாலை குறுகியதாக இருந்தது. அவ்வழியே எடுத்து சென்றால் செஞ்சிக்கோட்டை சுற்றுச்சுவரை இடித்த பின்னர் தான் எடுத்து செல்ல முடியும் என்பதால், இதற்கு தொல்லியல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.
அகலம் குறைத்தனர்
அதனால் சிலையின் அகலத்தை குறைக்கும் வேலை ஆரம்பமானது. பிறகு ஒரு வாரம் கழித்து நேற்று முன்தினம் மாற்று பாதையில் பெருமாள் சிலை புறப்பட்டது. ஆனால் திரும்பவும் குறுக்கீடு வந்துள்ளது. கண்ணலம் என்ற இடத்தில் ஒரு குறுகிய பாலத்தால் இப்போது சிலை தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாலம் சரிசெய்யும் பணி
இந்த பாலம் பழைய பாலம் என கூறப்படுகிறது. அதனால் சிலையை பாலத்தின் மீது கொண்டு சென்றால், சிலையின் எடையை தாங்காது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த பாலத்தில் பெருமாள் சிலையை கொண்டு செல்ல நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பாலத்தின் அருகிலேயே புதிதாக மண் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாமதம்
இந்த பணி எப்படியும் நாளைக்குள் முடிந்துவிடும் என்றும், புதிய சாலை வழியாக பெருமாள் சிலை சேத்பட், அவலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை சென்று அங்கிருந்து பெங்களூர் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர். எப்படியோ, அடுத்தடுத்த சிக்கல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால், பெருமாள் சிலையை பெங்களூர் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.