பெட்ரோல் பங்க் மீது நாட்டு குண்டு வீச்சு.. உடல் சிதறி மேலாளர் பலி.. விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளரை நான்கு பேர் கொண்ட கும்பலால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை கம்பன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இங்கு மேலாளராக சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இன்று நண்பகல் வழக்கம்போல் பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். மேலாளர் சீனிவாசன் பெட்ரோல் பங்கில் உள்ள தனது அறையில், வரவு, செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென பெட்ரோல் பங்கிற்குள் கார் ஒன்று வேகமாக நுழைந்துள்ளது. காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் நான்கு பேர், சீனிவாசன் இருந்த அறையின் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் ஒரு நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது. குண்டுவீச்சில் அங்கிருந்த மேலாளர் சீனிவாசன் படுகாயம் அடைந்தார். உடனே அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் சிறிது நேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொது மக்கள் திரண்டனர்.
இதனையடுத்து வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மாவட்ட போலீசார், சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ரமேஷிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தை சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டியுள்ளது. ரமேஷ் பணம் தர மறுத்து, காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ள, அந்த ரவுடி கும்பல் ரமேஷ் மீதுள்ள ஆத்திரத்தில், அவரது பெட்ரோல் பங்க் மீது வெடிகுண்டு வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது.