ராமதாஸ் வைத்த இரவு விருந்து.. தைலாபுரத்தில் குவிந்த முதல்வர், அமைச்சர்கள்
லோக்சபா தேர்தல் கூட்டணி உறுதியானதை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி கட்சிகளுக்கு விருந்து வைக்கிறார்.
விழுப்புரம்: லோக்சபா தேர்தல் கூட்டணி உறுதியானதை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு விருந்து வைக்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தைலாபுரம் வருகை புரிந்துள்ளனர்.
விழுப்புரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சொந்தமான தைலாபுரம் வீட்டில் விருந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் இந்த விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்கிறார்கள். 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி 8 மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
அதிமுக அமைச்சர்கள் பலர் விருந்தில் கலந்து கொள்கிறார்கள். அதேபோல் முக்கிய பாஜக நிர்வாகிகளும் விருந்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்களின் விவரம் இன்னும் முழுதாக வெளியாகவில்லை. விருந்தை முன்னிட்டு அங்கு அதிமுக, பாஜக, பாமக தொண்டர்கள் குவிந்து இருக்கிறார்கள்.
மேலும் அங்கு முக்கிய தலைவர்கள் வர இருப்பதால், போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. மூன்று கிமீ பகுதிக்கு போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விழாவிற்கான தடபுடலான சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருந்து நிகழ்ச்சி சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. விருந்து முடிந்த பின் பாமக போட்டியிடும் 7 லோக்சபா தொகுதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று இரவே இதற்கான அறிவிப்பு வெளியாகி வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.