வழிமறித்த திருடர்களை.. இறுக்கிப் பிடித்து.. தைரியமாக போராடிய பாட்டி.. சபாஷ்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் வழிப்பறி செய்ய வந்த திருடர்களை விரட்டியடித்த மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
விழுப்புரம மாவட்டம் திருமுண்டீஸ்வரத்தைச் சேர்ந்தவர் 62 வயது மூதாட்டி பென்னரசி. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இந்நிலையில் விழுப்புரம் நேருஜிவீதியில் உள்ள ஒரு வங்கியிலிருந்து தனது சேமிப்பு பணத்தை எடுப்பதற்காக வந்துள்ளார். தனது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 32 ஆயிரத்தை எடுத்துகொண்டு, ஷேர் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார்.
இதனிடையே வங்கி முன்பு நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பென்னரசி பணம் எடுத்துக்கொண்டு ஷேர் ஆட்டோவில் செல்வதை நோட்டமிட்டுள்ளனர். அவரை பின்தொடர்ந்த சென்ற மர்ம நபர்கள் இருவரும், பென்னரசிக்காக புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிய பென்னரசியிடம், பணப்பையை இருவரும் பறிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் பையை விடாப்பிடியாக கையில் பிடித்துக்கொண்ட பென்னரசி கடைசி வரை போராடியுள்ளார். பணப்பை வராத ஆத்திரத்தில் பென்னரசியை தாக்க முயன்றுள்ளனர். இருந்தபோதும் விடாப்பிடியாக பணப்பையை பிடித்துகொண்டுள்ளார் பென்னரசி.
அதற்குள் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், சம்பவ இடத்திற்கு ஓடி வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களும் தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலூக்கா காவல்நிலைய போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதனிடையே மூதாட்டியின் வீரத்தை அறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் மூதாட்டியை அழைத்து பாராட்டு தெரிவித்து, பரிசு பொருட்களை வழங்கினார். மூதாட்டியின் இந்த செயலை சமூக வலைதளங்களில் தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.