ஒரிஜினல் "திமிரு பிடிச்சவன்".. சபாஷ் போட்ட பொதுமக்கள்.. காக்கிகளில் இவர் கம்பீரம்!
செஞ்சி அருகே சாலையை போலீஸ்காரர் சீர் செய்துள்ளார்.
செஞ்சி: உடுத்தியிருப்பது காக்கி சட்டை.. ஆனால் கையில் மண்வெட்டி!! ஆனால் இவரை எல்லோரும் "திமிரு பிடிச்சவன்" என்கிறார்கள். ஏன்?
நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் தீப திருவிழா நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திருவண்ணாமலை நோக்கிசென்றார்.
அந்த சமயத்தில் பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். செஞ்சியிலும் அப்படித்தான் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இடைஞ்சல்
அப்போது அங்கு ஒரு இடத்தில் மண் குவிக்கப்பட்டிருந்தது. நடுரோட்டில் குவிக்கப்பட்டிருந்த மண் அந்த வழியாக சென்று, வந்து கொண்டிருந்த மக்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.
மண்வெட்டி
இதனை பார்த்த ஒரு போலீஸ்காரர் திடீரென்று ஒரு மண்வெட்டியை கொண்டு வந்து அதனை அப்புறப்படுத்த ஆரம்பித்துவிட்டார். பாதுகாப்புக்காக நின்றிருந்த மற்ற போலீசார் இதை பார்த்து மலைத்து நின்றனர்.
காக்கி சட்டை
கொஞ்ச நேரத்தில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த அந்த மணலை சமதளமாக பரப்பிவிட்டு, பாதையை செம்மைப்படுத்தினார். அந்த வழியாக போனவர்கள் எல்லோருமே காக்கி சட்டை போலீசின் இந்த செயலை பாராட்டிவிட்டு சென்றனர்.
திமிரு பிடிச்சவன்
இப்படித்தான் திமிரு பிடிச்சவன் படத்தில் விஜய் ஆண்டனியும் ஒரு போலீசாக இருப்பார். ரோட்டில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டதை பார்த்து அவரே அதனை சுத்தமும் செய்வார். நம்ம செஞ்சி போலீஸ்காரரும் "திமிர் பிடிச்சவனோ?" இவரது போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.