எடப்பாடி, ஓபிஎஸ் சுவர் விளம்பரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரக்கும் விழுப்புரம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுகவினரின் சுவர் விளம்பரத்தின் மீது திமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் இபிஎஸ், ஓபிஎஸ் சுவர் விளம்பரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரும் 20 ஆம் தேதி விழுப்புரத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில் கலந்துகொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் விழுப்புரம் வரவுள்ளார். ஸ்டாலினை வரவேற்கும் விதமாக, விழுப்புரம் நகரம் முழுவதும் சுவர் விளம்பரம், வரவேற்பு தட்டிகள் என திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் ரயில் சந்திப்பு மேம்பாலம் சுவற்றில் ஏற்கனவே அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஈபிஎஸ், ஓபிஎஸ் படங்கள் உள்ள சுவர் விளம்பரம் ஒன்று வரையப்பட்டிருந்தது. கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருகையையொட்டி, அந்த சுவற்றில் திமுகவினர், போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இதனை அறிந்த அதிமுகவினர், தங்கள் கட்சியின் சுவர் விளம்பரத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த திமுகவினரின் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் பதிலுக்கு அந்த சுவற்றின் மீது வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ளனர். இப்படியே இருதரப்பினரும் மாறி மாறி தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், அதிமுகவினரை கண்டித்து திமுகவினர் விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம் நகரில் மேலும் பதற்றமானது.
சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தார். எனினும் இரு தரப்புக்கும் எந்த நேரத்திலும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், ரயில்வே மேம்பாலத்தின் மீது வரையப்பட்டுள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் சுவர் விளம்பரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் இதுக்கெல்லாம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பா? உங்க கடைமை உணர்வுக்கு ஒரே அளவே இல்லையா என போலீசாரை பார்த்து முனுமுனுத்து செல்கின்றனர்.