வீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் உயர முடியாது.. அரசியல் ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பழனிசாமி பேச்சு!
வீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் அரசியலில் உயர முடியாது என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம்: வீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் அரசியலில் உயர முடியாது என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி இன்று பெரிய புயலை கிளப்பியது. இந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக கட்சி வெற்றிபெற்றது குறித்து முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். இவரின் பேச்சும் பெரிய வைரலாகி உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் இன்று முதல்வர் மக்கள் முன்னிலையில் பேசினார். இதில் புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து முதல்வர் பேசினார்.
என்ன பேசினார்
முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், அரசியலை சிலர் தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இரவு, பகல் பார்க்காமல் உழைத்தால் தான் மக்களின் நன்மதிப்பை பெறமுடியும். அரசியலில் திடீரென பிரவேசித்து, உடனே பதவிக்கு வந்துவிட முடியாது.
மிக கடுமை
அரசியலில் மிக கடுமையாக உழைக்க வேண்டும், இல்லையென்றால் முன்னேற முடியாது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உங்களைப்போல வீட்டில் இருந்து பேட்டி கொடுக்கவில்லை, அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள்.மக்களுக்கு சேவை செய்த பிறகுதான் எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்.
நேரடி சினிமா
சினிமாவில் இருந்து நேரடியாக அவர் கட்சி தொடங்கவில்லை. கட்சி தொடங்கியதும் வெற்றிபெற்று, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அதெல்லாம் நடக்காது.ஜெயலலிதா கடினமாக உழைத்தார்.
ஆட்சி எளிது அல்ல
அவருக்கு கட்சியும், ஆட்சியும் எளிதாக கிடைக்கவில்லை.மக்களுக்காக அவர் தொடக்கத்தில் இருந்து சேவை செய்தார். அதனால் அவர் மக்கள் மனதில் இடம்பிடித்தார். மக்கள் எல்லோருக்கும் எடை போட்டு சீர் தூக்கி வாக்களிப்பார்கள், என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.