ராமதாஸ் வீட்டில் இன்று தடபுடல் விருந்து.. முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு! சி.வி.சண்முகம் டிமிக்கி?
விழுப்புரம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு, தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று, விருந்தளிக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று மாலையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராமதாசுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
அப்போது, தனது தைலாபுரம் வீட்டுக்கு வருமாறு, ராமதாஸ் அழைப்புவிடுத்தார். இதையடுத்து, இன்று மாலை 6 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, பாமக தலைமை அலுவலகம் அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு செல்கிறார்கள். ராமதாஸ், அன்புமணி ஆகியோர் விருந்தளித்து உபசரிக்கவுள்ளனர். இதையொட்டி தைலாபுரம் தோட்டம் அமைந்துள்ள பகுதி காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட போலீசார் தைலாபுரம் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திண்டிவனத்தை சேர்ந்தவரும், தற்போதைய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில், ராமதாஸ், அப்போது மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் ராமதாசுக்கும், சி.வி. சண்முகத்துக்கும் இடையே கடும் மோதல் நிலவுவதால் விருந்தில் சண்முகம் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது.