ரவிகுமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் : இவர் யார் தெரியுமா?
விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ரவிக்குமார்.
நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (58). எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல் விமர்சகர் எனப் பன்முகத் திறமையாளரான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலராக இருக்கிறார்.
நிறப்பிரிகை எனும் குறும்பத்திரிக்கையின் ஆசிரியரான ரவிக்குமார், பல புதிய எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ராஜிவ் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட, விழுப்புரம் தொகுதியில் களமிறங்குகிறார் ரவிக்குமார். திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிட, ரவிக்குமார் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிடுகிறார்.
கொடுத்த கடனை யாரும் திருப்பி தராததால்.. சேலத்தில் ஒரே குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை
ஏற்கனவே, கடலூர் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிக்குமார், 2006 முதல் 2011 வரை எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்தார். தற்போது மீண்டும் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராமசாமி படையாச்சி நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த தொகுதி இது. சமீபகாலமாக திமுக, அதிமுக நேரடியாக போட்டியிட்டு வருகின்றன. மதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய செஞ்சி ராமச்சந்திரன் இரண்டுமுறை எம்.பி.யாக இருந்த தொகுதி இது. பாமகவும் வென்ற தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.