இறந்த தந்தையின் உடல் முன்பு தாலி கட்டி கல்யாணம்.. கதறி கதறி அழுத அலெக்சாண்டர்.. நெகிழ்ச்சி தருணம்!
Recommended Video
விழுப்புரம்: அன்பான அப்பா உயிரோடு இல்லை.. ஆனால் அவரது உடலிடம் ஆசிர்வாதம் பெற்று காதலியை ஆசிரியர் ஒருவர் கல்யாணம் செய்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி. இவருடைய மகன் அலெக்சாண்டர். 27 வயதாகிறது. மயிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார்.
இவர், தன் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஜெகதீஸ்வரி என்ற டீச்சரை விரும்பினார். இருவரும் ரொம்ப நாளாக காதலித்து வந்தனர். விஷயத்தை வீட்டில் சொல்லவும் அதற்கு இரு தரப்பிலும் சம்மதமும் சொன்னார்கள்.
கல்யாணம்
அலெக்சாண்டருக்கும், ஜெகதீஸ்வரிக்கும் அடுத்த மாசம் 2-ந்தேதி மயிலம் முருகன் கோவிலில் கல்யாணம் என்று முடிவானது. திண்டிவனம் பக்கத்திலேயே ஒரு கல்யாண மண்டபத்தில் ரிசப்ஷன் என்றும் பேசி முடித்தார்கள். இதற்காக பத்திரிகை அச்சிடப்பட்டு, ஊர் முழுக்க தரப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தெய்வமணி நேற்று திடீரென இறந்துவிட்டார்.
நொறுங்கி போனார்
அடுத்த மாசம் கல்யாணம் உள்ள நிலையில் தெய்வமணி இறந்தது இரு குடும்பத்துக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் தந்தது. இதில் ரொம்பவே நொறுங்கி போனவர் அலெக்சாண்டர்தான். அப்பா என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். ஊர் முழுக்க பார்த்தாலும், கல்யாணத்தை பார்க்க அப்பா இருக்க மாட்டார் என்பதை நினைத்து தேம்பி தேம்பி அழுதார் அலெக்சாண்டர்.
ஜெகதீஸ்வரி
அதற்காக தந்தையின் உடல் முன்பு ஜெகதீஸ்வரி கழுத்தில் தாலி கட்ட போறேன் என்று வீட்டில் சொன்னார். இதை கேட்டு முதலில் அதிர்ந்த குடும்பத்தார், ஜெகதீஸ்வரி வீட்டாரிடம் எடுத்து சொல்லி சம்மதம் கேட்டார்கள். சூழலையும், மகனின் பாசத்தையும் உணர்ந்த அவர்களும் இதற்கு ஒப்புதல் தந்தனர்.
தாலி கட்டினார்
இதையடுத்து ஜெகதீஸ்வரி குடும்பத்தினர், அவரது சொந்தக்காரர்கள் சிங்கனூருக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் தெய்வமணியின் கைகளில் தாலியை வைத்து ஆசிர்வாதம் பெற்ற அலெக்சாண்டர், ஜெகதீஸ்வரியின் கழுத்தில் கட்டினார். அப்போது கதறி கதறி அழுதார் அலெக்சாண்டர். கூடிநின்ற எல்லோருமே இதை பார்த்து அழுதனர். தந்தை இறந்த பிறகும் அவரது உடலிடம் ஆசிர்வாதம் பெற்று நடந்த இந்த கல்யாணம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை தந்தது.