கள்ளக்குறிச்சி.. கிணற்றில் பாய்ந்த குப்பை வண்டி.. நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக பலி.. !
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் குப்பை வண்டி தவறி விழுந்ததில், சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட க.அலம்பலத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி வனிதா. அதே ஊராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வரும் வனிதாவுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பை அள்ளுவதற்காக பேட்டரியால் இயங்கக்கூடிய குப்பை சேகரிப்பு வாகனம் ஒன்று வழங்கப்பட்டது.
வாகனத்தை ஓட்டி பழகுவதற்காக, அதே ஊரிலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியின் வளாகத்தில் வனிதா வாகனத்தை ஓட்டி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாா். அந்த வாகனத்தில் வனிதாவின் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்த அவருடைய 6 வயது மகன் பாலாஜியும் அமா்ந்திருந்தாா்.
அப்போது வனிதாவின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், திடீரென சாலையோரத்தில் உள்ள 50 அடி கிணற்றில் விழுந்தது. இதில் வனிதா, கிணற்றின் பக்கவாட்டில் உள்ள கற்களை பிடித்துக்கொண்டு வெளியே வரமுடியாமல் தத்தளித்தார். மேலும் தனது மகன் பாலாஜி நீரில் மூழ்கியதைக் கண்டு பதறி கூச்சலிட்டாா். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வனிதாவை மீட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையக் குழுவினா் விரைந்து வந்து, கிணற்றிலிருந்த அந்த வாகனத்தை கயிறு மூலம் மீட்டனா்.
தொடா்ந்து, கிணற்றில் இருந்த தண்ணீா் இரு மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டு, சிறுவனை சுமாா் 3 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்டனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பை வண்டி கிணற்றில் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.