மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை.. கத்தியால் குத்தி கொலை செய்த மகள்!
விழுப்புரம்: மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்தி கொலை செய்தார். விழுப்புரம் மாவட்டம் அவலுார்பேட்டையை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(40).
விவசாயி. மாற்றுத்திறனாளியான இவர், வேன் மூலம் தக்காளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வெங்கடேசனுக்கு 2 மகள்கள் உள்ளனர். 20 வயதான மூத்த மகள் சென்னையில் தங்கி, ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். 17 வயதான இளைய மகள் அவலுார்பேட்டையில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்.. சேகர் ரெட்டி மேட்டரில் சிக்கும் திமுக அமைச்சர்.. நெருக்கடி?
கொலை செய்தார்
மதுபோதைக்கு அடிமையான தக்காளி வியாபாரி வெங்கடேசன், நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இளைய மகள் வீட்டில் இருந்தார். போதை தலைக்கேறிய நிலையில் வெங்கடேசன் மகள் என்றும் பாராமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தந்தையின் மார்பில் குத்தியுள்ளார்.
போலீசார் விசாரணை
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது தந்தை கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் அவரது மகள் தெரிவித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், செஞ்சி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி, அவலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
சந்தேகம்
மேலும், தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர். வியாபாரி இறந்தது தொடர்பாக அவரது மகள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், போலீஸ் மோப்ப நாய் ராக்கி, அவரை சுற்றிச் சுற்றி வந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனை தொடர்ந்து இளைய மகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
ஒப்புக் கொண்டார்.
அப்போது அவர் நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறி தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசனின் அக்காள் பச்சையம்மாள் என்பவரும் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளைய மகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.