லாட்டரிச் சீட்டால் பாதிக்கப்பட்ட குடும்பம்.. விஷம் அருந்தி 5 பேர் தற்கொலை
Recommended Video
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாட்டரி சீட்டு வாங்கியதில் கடன் ஏற்பட்டதால் சைனைடு கொடுத்து 3 குழந்தைகளையும், மனைவியையும் கொலைசெய்துவிட்டு சைனைடு சாப்பிட்டு நகை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விழுப்புரம் சித்தேரி அருகே சலாமத் நகரில் வசித்து வருபவர் நகைத் தொழிலாளி அருள். இவருக்கு சிவகாமி என்பவருடன் திருமணம் ஆகி இருந்த நிலையில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். நகை தொழில் செய்யும் இவர், மந்தக்கரை என்னும் பகுதியில் பல மாதங்களாக தொடர்ந்து மூன்று நம்பர் லாட்டரியில் தான் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் செலவு செய்து வந்துள்ளார்.
தினந்தோறும் இது ஒரு வாடிக்கையான நிகழ்வாய் தொடர்ந்து போனதால் பண நெருக்கடி ஏற்பட்டு கடன் தொல்லைகளில் சிக்கியுள்ளார் அருள். இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த அருள் நேற்று மாலை 6 மணிக்கு வீடு திரும்பி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
தான் நகை தொழிலுக்கு பயன்படுத்தும் சயனைட்டை அவரது ஆறு வயது மகள் பிரியதர்ஷினி, மூன்று வயது மகள் யுவஹீ, நான்கு மாத குழந்தை பாரதி ஆகியோருக்கு கொடுத்து கொன்றுவிட்டு, பிறகு மனைவி சிவகாமியுடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் அதை விஷ்வகர்மா நகை தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த சில நபர்கள் உடனடியாக அருளின் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். ஆனால் அவர்கள் 5 பேரும் உயிரற்ற நிலையில் சடலங்களாக இருந்துள்ளனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மன உளைச்சலுடன் கடைசி நிமிட மரண வாக்குமூலத்தில் விழுப்புரத்தில் மூன்று நம்பர் லாட்டரியை ஒழித்தால் நிச்சயம் என்னை போன்று பல குடும்பங்களை காப்பாற்றலாம் என்று பதிவு செய்திருப்பது பொது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.