உதவி பண்ணுங்க.. விபத்தில் சிக்கி கதறி துடித்த சென்னை பெண்.. திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொடூரம்
Recommended Video
திண்டிவனம்: விபத்தில் காயமடைந்த பெண் உதவி கேட்டு கதறியும் மனம் இளகாமல் மருத்துவ ஊழியர்கள் செயல்பட்ட விதம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை புரசைவாக்கத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று அதிகாலை சென்னை நோக்கி அந்த குடும்பம் வந்துள்ளது. சென்னை நோக்கி டெம்போ டிராவலரில் அவர்கள் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை இவர்களின் டிராவலர் திண்டிவனம் அடுத்த சலவாதி அருகே இன்று அதிகாலை இந்த டெம்போ விபத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த டெம்போ அதிக வேகத்தில் சென்று இருக்கிறது. அப்போது நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது வேகமாக டெம்போ மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திண்டிவனம் டி.எஸ்.பி திருமால் தலைமையிலான போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனையில் இருந்த ஒரு மருத்துவரும் 3 செவிலியர்களும் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் பணிப்பதிவேடுகளை பராமரிக்கும் பணியில் ஆர்வம் காட்டியபடி இருந்தனர்.
அரசு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமுற்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து
கொண்டிருந்தனர். இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த புரசைவாக்கத்தில் நகை கடை நடத்தி வரும் தொழிலதிபரின் மனைவி மருத்துவர்களின் அலட்சியத்தாலும், அரசு 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காயம் அடைந்தவர்களை சென்னைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்ல உடன்படாததாலும் கதறி அழுதார்.
சென்னை அழைத்து செல்ல கெஞ்சினார். வாகன வசதி இன்றி கொட்டும் பனியில் 1 மணிநேரத்திற்கும் மேலாக மருத்துவமனை வளாகத்திலேயே, வலி காரணமாக, கதறி அழுதவாறே இருந்தார். ஒரு டாக்டரும் இல்லையா, நர்சும் இல்லையா என அவர் கதறினார். இந்த சம்பவம் மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், திண்டிவனம் அரசு மருத்துவமனையின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.