கொடுமை.. ஒன்றரை வருஷமாக.. 16 பேரால் சீரழிக்கப்பட்ட 7 வயது சிறுமி மர்ம மரணம்.. அதிர்ச்சியில் தமிழகம்!
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவர் பலியாகி உள்ளார்
விழுப்புரம்: மொத்தம் 16 பேர் சேர்ந்து 2 சிறுமிகளை ஒன்றரை வருஷமாக நாசம் செய்துள்ளனர்.. அதில் 7 வயது சிறுமி தற்போது பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.. நம் தமிழகத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒட்டு மொத்த பேரையும் அதிர்ச்சியில் கொந்தளிக்க வைத்துள்ளது!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பிரம்மதேசத்தில் 2 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது: அங்கு வசித்து வந்த ஒரு பெண்ணுக்கு 10 மற்றும் 7 வயதில் 2 மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த, அந்த பெண், 2வது கல்யாணம் செய்து கொண்டார். சென்னைக்கும் குடித்தனம் நடத்த சென்றுவிட்டார்.
அதனால், தன்னுடைய 2 மகள்களையும் அம்மா வீட்டில், அதாவது சொந்த கிராமத்திலேயே விட்டுவிட்டு சென்றார். பாட்டி வீட்டில்தான் 2 குழந்தைகளும் வசித்து வந்துள்ளனர்.. அப்போதுதான் 2 பிஞ்சுகளுக்குமே பாலியல் தொல்லை அரங்கேறி உள்ளது... மொத்தம் 16 பேர்.. எல்லாருமே தாய்மாமன் உட்பட சொந்தக்காரர்கள்... ஒன்றரை வருஷமாக அந்த குழந்தைகளுக்கு மிரட்டி மிரட்டியே சீரழித்துள்ளனர்... வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், மகள்களை பார்க்க பெற்ற தாய் ஊருக்கு போனபோதுதான் நடந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றார்... 2 மகள்களையும் புதுச்சேரிக்கு அழைத்து சென்று, அங்குள்ள ஒரு ஸ்கூலில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்... ஆனால், குழந்தைகள் உடல்நிலை ரொம்பவும் மோசமாகி விட்டது.. அதிலும் மூத்த மகள் அதிகமாகவே பாதிக்கப்பட்டார்... இதை பார்த்த அந்த ஸ்கூல் டீச்சர், மாணவியை கூப்பிட்டு என்ன, ஏதென்று விசாரித்தார்.
சிகிச்சை
அப்போதுதான் நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்லி அழுதிருக்கிறாள் அந்த குழந்தை.. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை உடனே சைல்டு லைனில் புகார் அளித்தார். அதன்படி, சைல்டு லைன் அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்தினர். உடனடியாக, 2 சிறுமிகளையும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பலாத்காரம்
சம்பவம் குறித்து சைல்டு லைன் அதிகாரிகள் பிரம்மதேசம் ஸ்டேஷனில் புகார் தந்தனர்... போலீசாரும் விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் 2 மகள்களையும் 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.. பலாத்காரம் செய்த 20க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அதில், 16 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு இப்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
வயிற்று வலி
ஆனால், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும் தீபாவளி சமயத்தில் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். அந்த சமயத்தில்தான், 2வது மகளான 7 வயது சிறுமியை மட்டும் பெற்ற தாய், சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில், 2 நாளாக கடுமையாக வயிறு வலிப்பதாக சொல்லி கொண்டே இருந்தாள் சிறுமி.. நேற்றுமுன்தினம் பாத்ரூமுக்கு சென்றவள் ரொம்ப நேரமாகியும் வெளியே வரவில்லை.. அதனால் சந்தேகமடைந்த தாய், பாரூமுக்குள் சென்று பார்த்தபோதுதான் சிறுமி மயங்கி விழுந்து கிடந்தாள்.
போலீசில் புகார்
உடனடியாக ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றபோது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கேகேநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததால் தான், உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று, சிறுமியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிர்ச்சி
சொந்த உறவினர்கள் 16 பேரால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ்நாடு தானா? நம் பிள்ளைகளை எப்படிதான் பாதுகாப்பது? சொந்தக்காரர்களையும்கூட நம்ப முடியவில்லையே? என்ற கலக்கத்தையும் பீதியையும் தந்துள்ளது.. இந்த காம மிருகங்களுக்கு உடனடியாக உச்சக்கட்ட தண்டனை தந்தே ஆக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்து வருகின்றன!