காலை முதல் மாலை வரை நிற்க வைத்த ஜெயிலர்.. திண்டிவனம் சப்ஜெயிலில் காவலர் பாரதி செய்த பகீர்!
விழுப்புரம்: திண்டிவனம் சப் ஜெயிலில் காவலர் பணிச்சுமையால் கையை பிளேடால் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் பகுதியைச் சேர்ந்த பாரதி மணிகண்டன் என்பவர் திண்டிவனம் சப் ஜெயிலில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை ஜெயிலில் நின்றவாறே பணிபுரிந்துள்ளார். திடீரென இரவு பிளேடால் இடது கை மணிக்கட்டில் கிழித்து கொண்டதை கண்ட அருகிலிருந்த காவலர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் காலையில் 9 மணிக்கு பணிக்கு வந்தால் இரவு 7 மணி வரை நின்று கொண்டே பணி செய்ய வேண்டும் என சப்ஜெயிலரின் உத்தரவால் நின்று கொண்டிருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு பிளேடால் தனது இடது கையின் மணிக்கட்டுப் பகுதியில் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பணி செய்யும் போது அமர்ந்தால் புகார் தெரிவிப்பதாகவும் இதனால் அதிக பணிச்சுமை உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். திண்டிவனம் சப் ஜெயிலில் காவலராகப் பணி புரிபவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.