தைலாபுரபும் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த 2 அமைச்சர்கள்.. 2 மணி நேரம் நடந்த மீட்டிங்.. பரபர தகவல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன் தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் ஆகியோர் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சுமார் இரண்டு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்ததாகவும், என்ன பேசினார்கள், எதற்காக இந்த சந்திப்பு இப்போது நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விவரங்களும் வெளியாகவில்லை என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் ஒரு மாதத்திற்கு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தேர்தல் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி
இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை ஒரு அணியாகவும், திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக ஆகியவை ஒரு அணியாகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமான் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக ஆகியவை தனித்தனியாகவும் இப்போது வரை தேர்தலை சந்திக்க களமாடி வருகின்றன.
தொகுதி பங்கீடு
இதில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்ட நிலையில் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் பாமக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தங்கமணி
இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாசை திங்கள்கிழமை அதிமுகவைச் சேர்ந்த தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்.
தைலாபுரம் தோட்டம்
வீட்டிற்கு வந்த இரு அமைச்சர்களும், உள்ளே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அவருடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோரும் இருந்தனர்.. வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த லோக்சபா தேர்தலிலிருந்து, அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியை தொடர்வதற்காக அதிமுக தரப்பில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளதாக தெரிகிறது.
கூட்டணி பேச்சுக்கள்
பாமக தரப்பில், வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீதம் உள் இடஒதுக்கீடு தொடர்பாக வைத்த கோரிக்கையை, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். அத்துடன், கூட்டணி உறுதிபடுத்த தொகுதி பங்கீடு குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரமாக பேசிவிட்டு வீடு திரும்பினார்கள். செய்தியாளர்கள் யாரும் தோட்டத்திற்குள் உள்ளே அனுமதி இல்லை என்பதால் என்ன பேசினார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்களோ, அதிகாரப்பூர்வமான தகவல்களோ வெளியாகவில்லை.