துணிகளுக்குள் மறைத்து.. குவார்ட்டரை கடத்திய 2 பெண் குருவிகள்.. மடக்கிய போலீஸ்
விழுப்புரம்: புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழக பகுதியான விழுப்புரத்திற்கு துணிப்பையில் மது பாட்டில்களை கடத்தி வந்த இரண்டு பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 340 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தை காட்டிலும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுபானங்களின் விலை மிகவும் குறைவு. தமிழகத்தில் ஒரு பீரின் விலை ரூபாய் 150 என்றால், அதே பீர் புதுச்சேரியில் வெறும் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று விஸ்கி, பிராந்தி, ஒயின், வோட்கா, பிரிசர் என அனைத்து வகையான மதுபாட்டில்களும், தமிழகத்தைவிட பாதிக்கு பாதி விலை குறைவாக விற்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவு என்பதாலும், பல்வேறு மது வகைகள் அங்கு கிடைப்பதாலும், புதுச்சேரி மதுவை ருசித்து பார்ப்பதற்கு, அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதுச்சேரி வந்து செல்கின்றனர்.
புதுச்சேரி மதுவை ருசித்து பார்ப்பதற்கு ஒரு தரப்பினர் வந்தாலும், மதுவை கடத்தி விற்பதற்கும் நாள்தோறும் புதுச்சேரிக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டத்திற்கு புதுச்சேரியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மது கடத்தப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
மதுக்கடத்தலை தடுக்க தமிழக - புதுச்சேரி எல்லைப்பகுதிகளான கெங்கராம்பாளையம், புத்துப்பட்டு, முள்ளோடை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு மதுவிலக்கு சோதனைச்சாவடிகளை அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும், மதுக்கடத்தலை தடுக்க முடியவில்லை. தற்போது ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக மது கடத்துவதில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியொரு சம்பவம்தான் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தாலுகா காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் இரண்டு பெண்கள் துணி பைகளில் 300 க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில குவாட்டர் பாட்டில்களை கடத்தி வந்துள்ளனர்.
உடனடியாக அவர்களை பேருந்தில் இருந்து கீழே இறக்கி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் விழுப்புரம் மாவட்டம் மொளச்சூரை சேர்ந்த வள்ளி மற்றும் ஆயந்தூரை சேர்ந்த மேரி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரத்தில் இருந்து தினந்தோறும் புதுச்சேரிக்கு சென்று, அங்கு மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர்.
மேலும் பெண்கள் என்பதால் இத்தனை நாட்களாக தங்களை போலீசார் சோதனை செய்தது கிடையாது என்றும், ஆனால் இன்று வசமாக மாட்டிகொண்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அந்த இரண்டு பெண்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 340 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.