அமைச்சருக்கு வந்த அந்த போன் கால்... ஒருமையில் திட்டிய 'குடி'மகன்... வியர்த்து விறுவிறுத்த நிகழ்வு..!
விழுப்புரம்: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அலைபேசியில் அழைத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை ஒருமையில் திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
கடந்த புதன்கிழமை அன்று மாலை அமைச்சர் சி.வி.சண்முகம் அலைபேசிக்கு தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் இருந்திருக்கிறது. அழைப்பு விடுக்கும் எண்ணை தமது போனில் பதிவு செய்யாததால் அமைச்சரும் அந்த அழைப்பை நிராகரித்திருக்கிறார். ஆனாலும், அழைப்பு ஓய்ந்ததாக இல்லை.
இதையடுத்து அந்த அழைப்பை ஏற்று பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார். எதிர்முனையில் பேசிய நபர் அமைச்சரை ஒருமையில் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதையடுத்து தன்னை மிரட்டியது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி சஞ்சய்காந்தி மூலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், மிரட்டல் விடுத்த நபரை அலைபேசி எண் மற்றும் செல்போன் டவர் மூலம் கண்டறிந்தனர். அதில் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தது திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தை சேர்ந்த கங்காதரன் என்பது தெரியவந்தது.
கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவ விருதுகள்.. உலக தமிழ் சங்கங்ககள் அசத்தல்
இதையடுத்து சிறுகளப்பூர் கிராமத்திற்கு சென்ற போலீஸ் டீம், கங்காதரனை விழுப்புரத்திற்கு அள்ளிக்கொண்டு சென்றது. அங்கு வைத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாம் ஒரு டிராக்டர் ஓட்டுநர் என்றும் குடிபோதையில் இது போன்று செய்துவிட்டதாகவும் மன்னிப்பு கோரியிருக்கிறார். இதனிடையே அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குற்றப்பிரிவு போலீஸார் கங்காதரனை சிறையில் அடைத்தனர்.