நம்ம ஊரு ஹீரோ.. விக்கிரவாண்டியை வெல்ல.. கையில் கரும்புடன் களம் குதித்த கந்தசாமி!
விக்கிரவாண்டியில் கந்தசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்
விழுப்புரம்: மாட்டு வண்டியில் கந்தசாமி.. கந்தசாமி கையில் கரும்பு.. என பட்டையை கிளப்பிக் கொண்டு ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!
அதிமுக, திமுக தவிர மாநில அளவிலான பெரிய கட்சிகள் எதுவும் இந்த முறை போட்டியிடாத போது, வேலூரை போலவே நாம் தமிழர் கட்சி மட்டும் வரப்போகும் இடைத்தேர்தலை சந்திக்கிறது.
அதன்படி, விக்கிரவாண்டி மு.கந்தசாமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று கந்தசாமி மனு தாக்கல் செய்ய போனதை கண்டு ஊர் மக்களே வியந்து பார்த்தனர். மாட்டு வண்டியில் கரும்புகளை கட்டிக் கொண்டு அதில் சென்று மனு தாக்கல் செய்துள்ளார்.
மாட்டு வண்டி
நம் மரபையும், விவசாயத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக மாட்டு வண்டியை கட்டிக் கொண்டு வந்தார். வண்டி முழுக்க கரும்புகள் முளைத்து காணப்பட்டன. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த ஒரு மாட்டு வண்டியில் நிறைந்து வழிந்தனர். கந்தசாமி கையில் கட்சி கொடியை பிடித்தபடி நின்று மாட்டு வண்டியில் நின்று கொண்டே வந்து, கடைசியில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு போனார்.
யார் இந்த கந்தசாமி?
யார் இந்த கு. கந்தசாமி? வயசு 36 ஆகிறது. விவசாய குடும்பம்தான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறாராம். ஆனால் சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை செலுத்துபவர். சமூகச் செயற்பாட்டாளர் கந்தசாமி என்றாலே அந்த சுற்றுவட்டாரத்தில் நன்கு தெரிகிறது.
நற்பணி மன்றம்
2009-ம் ஆண்டு முதல் சிகரம் நற்பணி மன்றம் தொடங்கி கிராமப்புற ஏழை எளிய முதியோர்களுக்கு மனமகிழ் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, மருத்துவ உதவிகள், ஏழை மாணவர்களுக்கு தேர்வில் வெற்றிபெற பயிற்சி மற்றும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வந்துள்ளார்.
நம்ம ஊரு ஹீரோ
எனினும், "நம்ம ஊரு ஹீரோ" என்ற பெயரில் ஒரு தனியார் டிவி ஷோவில்தான் இவர் முகம் வெளியே தெரிய ஆரம்பித்தது. பிறகு இவரது தொடர்ச்சியான ஊக்கம் தரும் செயல்களால், பல்வேறு நாளிதழ்கள் இவரை பற்றி செய்திகளை வெளியிட ஆரம்பித்தது.
களப்பணி
தனிப்பட்ட முறையில் இவர் சமூக செயற்பாட்டாளர் என்றாலும், கட்சி ரீதியாக இவரது பணி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தீவிரமான களப்பணி ஆற்றுபவர். எத்தனையோ போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களை கட்சி சார்பாக முன்னெடுத்துள்ளார். தனிப்பட்ட முறையிலும்சரி, கட்சி ரீதியிலும் சரி, இவரது நற்செயல்கள் உற்று நோக்கும்படியே இருப்பதால்தான் சீமான் இவருக்கு வாய்ப்பை வழங்கி உள்ளதாக தெரிகிறது!