விழுப்புரம் அருகே அதிர்ச்சி... இறந்த கொரோனா நோயாளி உடல்... புதைக்க கிராமத்தினர் எதிர்ப்பு!!
செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவரின் உடலை மேல் எடையாளம் என்ற கிராமத்தில் புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி வரை அந்த கிராமத்தில் புதைக்க கிராம மக்கள் அனுமதிக்காத காரணத்தினால் வேறு இடத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நரசிங்கராயன்பட்டியைச் சேர்ந்த 52 வயதுக்காரர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஜூலை 24ஆம் தேதி வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மறுநாளே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய் கிழமை இவர் உயிரிழந்தார்.
இவரது விருப்பத்தின்படி உடலை இவரது சொந்த கிராமமான மேல் எடையாளம் என்ற கிராமத்தில் முஸ்லிம்களுக்கான இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அதற்கு முன்னதாக அவரது உறவினர்கள் புதைப்பதற்காண ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இந்த தகவலை அறிந்த கிராமத்தினர் அந்த கிராமத்தின் இரண்டு நுழைவு வாயிலிலும் நின்று கொண்டு ஆம்புலன்சை உள்ளே விடவில்லை. கொரோனா நோயாளியை அவர்களது கிராமத்தில் புதைக்க அனுமதித்தால், கொரோனா தொற்று பரவும் என்று அஞ்சி அனுமதிக்க மறுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தொடர்ந்து சாலையில் இருந்து கிராமத்துக்குள் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத வகையில் குழி தோண்டினர். கிராமத்தினருடன் அவரது உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் திரும்பி செஞ்சி சென்று அங்கிருக்கும் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கொத்தமங்கலம் அருகே பெரியகாஞ்சகுலம் என்ற இடத்தில் மசூதிக்கு அருகே குழி தோண்டி புதைத்தனர். இந்த சம்பவம் உறவினர்களையும், குடும்பத்தினரையும் கவலை அடையச் செய்துள்ளது.