ஊழலுக்கு துணை போகிறார்.. விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் மீது துணை கலெக்டர் பரபரப்பு புகார்
விழுப்புரம்: சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் ஊழலுக்கு துணைபோவதாகவும் விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் மீது துணை கலெக்டர் குமரவேல் குற்றம்சாட்டிஉள்ளார். மாவட்ட நிர்வாகம் சீர்கெட்டதற்கு ஆட்சியர் தான் காரணம் என்று குமரவேல் குற்றம்சாட்டி உள்ளார். துணை கலெக்டர் குமரவேல் தற்போது காத்திருப்போர் பட்டியிலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் (துணை கலெக்டர்) குமாரவேல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த குமாரவேல், இது பழிவாங்கும் நடவடிக்கை என்று மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணி மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர் மீது குற்றம்சாட்டி உள்ளார்.
வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல் நேற்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியர்கள் தமிழகம் முழுவதும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்கள். என்னை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்கள். பழிவாங்கும் நோக்குடன் என்னை மாவட்ட நிர்வாகம் சதி செய்து இடமாற்றம் செய்துள்ளது.
என் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி?.. ஜோதிமணி குமுறல்
தாசில்தார் பொறுப்பில் உள்ள எனது நேர்முக உதவியாளர் கணேசன் சொல்லாமல் திடீரென 30 நாட்கள் மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்துவிட்டுச் சென்றார். அதனை நான் நிராகரித்தேன். ஆட்சியரிடம் அவர் சென்று முறையிட்டார். சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது ஆட்சியர் இதுபற்றி கேட்க என்ன அதிகாரம் இருக்கிறது. என்னை சுதந்திரமாக செயல்படவில்லை. என்னுடைய எல்லா பணிகளிலும் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் தலையீடு இருந்தது. தேர்தல் பணியின் போதும் தலையீடு இருந்தது மாவட்ட ஆட்சியர் ஊழலுக்கு துணை போகிறார்" என குற்றம்சாட்டினார்.
இது பற்றி விளக்கம் அளித்துள்ள விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், "தமிழகம் முழுவதும் வருவாய் கோட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. எனக்கு இடமாற்றம் செய்ய அதிகாரம் கிடையாது. கோட்டாட்சியரின் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த விதமான கருத்தும் சொல்ல விரும்பவில்லை. சொல்லவும் கூடாது. உயர் பதவியில் இருப்பவர்கள் இப்படி பேசுவது சட்டப்படி தவறு" என்றார்.