3 மகள்களையும் எழுப்பி.. மடியில் கிடத்தி.. வாயில் விஷத்தை ஊற்றிய சிவகாமி.. விழுப்புரம் தற்கொலை..சோகம்
கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
விழுப்புரம்: தூங்கி கொண்டிருந்த 3 குழந்தைகளையும், ஒவ்வொருவராக எழுப்பி.. தன் மடியில் கிடத்தி.. கண்ணீருடன் விஷத்தை அவர்களது வாயில் ஊற்றி உள்ளார் சிவகாமி.. இதன்பிறகுதான் அருண்-சிவகாமி தம்பதியினர் சயனைடு குடித்து உயிரை விட்டுள்ளனர்.
விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரில் வசித்து வந்தார் அருண்.. 33 வயதுதான் ஆகிறது.. அதே பகுதியில் பட்டறை வைத்து நகை தொழில் செய்து வந்தார்.
மனைவி பெயர் சிவகாமி.. கல்யாணம் ஆகி 7 வருடங்கள் ஆகி.. பிரியதர்ஷினி 6, யுவஸ்ரீ 3, பாரதி 4 மாத குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
என் பொண்ணு மூச்சு திணறுதுடா.. சாக வச்சுட்டீங்களேடா.. பதற வைத்த விழுப்புரம் தற்கொலை!
சொந்தவீடு
நல்ல வருமானமும் வந்தது.. அதனால்தான் 3 வருஷத்துக்கு முன்பு விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் மீனாட்சி நகர் பகுதியில் 50 லட்சம் ரூபாய்க்கு சொந்தமாக வீடு கட்டி உள்ளார்.. அதன்பிறகுதான் நஷ்டம் வர ஆரம்பித்தது. கடன் வாங்கியும் சமாளிக்க முடியாத நிலையில்தான், ரகசியமாக லாட்டரி சீட்டு அந்த பகுதியில் விற்பது அருணுக்கு தெரியவந்தது.
பட்டறை
3 நம்பர் லாட்டரி வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பு அருணுக்கு ஆழமாக விழுந்தது.. பட்டறையில் வரும் கொஞ்சம் நஞ்சம் பணத்தையும் லாட்டரியில்தான் போட்டார்... கடைசியில் சீட்டு வாங்கியே நஷ்டம் இன்னும் அதிகமாகிவிட்டது. பட்டறையில் 15 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்கும் சம்பளம் தரமுடியவில்லை.. பட்டறையையும் நடத்த முடியவில்லை.. அதனால் வேறு ஒரு பட்டறைக்கு சம்பளத்துக்கு செல்லும் நிலை அருணுக்கு ஏற்பட்டது.
3 பெண் குழந்தைகள்
சொந்த வீட்டை ஒன்றரை வருஷத்திலேயே விற்றுவிட்டு, கடனை அடைத்து ஒரு வாடகை வீட்டுக்கு குடியேறினார். தொடர்ந்து சமாளிக்க முடியாத சூழல்.. மூணுமே பெண் குழந்தைங்க.. எப்படி வாழ போவது என்று விழிபிதுங்கிய நிலையில்தான் குடும்பத்துடன் தற்கொலை என்ற முடிவுக்கு வந்தார். மனைவியும் சம்மதித்தார்.. முதலில் தம்பதி மட்டும்தான் தறகொலை செய்வதாக இருந்தது.. ஆனால், குழந்தைகளை இனி யார் கவனிப்பார்கள் என்ற பீதியில், அவர்களையும் கொல்ல மனதை கல்லாக்கி கொண்டனர்.
சயனைடு
நேற்றுமுன்தினம் வீட்டுக்கு வரும்போதே சயனைடு பவுடரை வாங்கி வந்தார் அருண்.. குழந்தைகள் 3 பேருமே தூங்கி கொண்டிருந்தனர். பாலில் சயனைடு கலந்து, தூங்கி கொண்டிருந்த குழந்தையை எழுப்பி சிவகாமி, தன் மடியில் கிடத்தி, இந்த விஷத்தை அவர்கள் வாயில் ஊற்றியுள்ளார்.. அரை குறை தூக்கத்திலேயே குழந்தைகளும் அதை குடித்துவிட்டு அப்படியே படுத்து கொண்டன.. கொஞ்ச நேரத்தில் வாயில் நுரை தள்ளி.. கீழே விழ.. இதனை அருண் கதறி அழுதபடியே செல்போனில் வீடியோ எடுத்தார்.
தற்கொலை
பின்னர் தம்பதி தற்கொலைக்கு முன்பாகத்தான், அருண் வீடியோவில் பேசி.. நண்பர்களுக்கும் அதை அனுப்பி வைத்தார். இதன்பிறகு இருவரும் சயனைடு குடித்து விழுந்தனர்.. நண்பர்கள் பதறியடித்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே போவதற்குள் எல்லாருமே உயிரிழந்து கிடந்தனர். 5 பேரின் உடலை பார்த்து உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கதறி கதறி அழுதனர். வீடியோவில் அருண் பேசும்போது,"விழுப்புரத்துல லாட்டரி சீட்டை ஒழிச்சிடுங்கப்பா" என்று தெரிவித்திருந்தார்.
கைது
அதன்படி, விழுப்புரத்தில் சட்ட விரோதமாக 3 நம்பர் லாட்டரி விற்கப்பட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.. அத்துடன் இந்த பெரும் சோகத்தை அடுத்து விழுப்புரம் காவல் துறையினர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.. எனினும், ஒரு குடும்பமே கண்ணெதிரே தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து தமிழக மக்கள் இன்னும் மீளவே இல்லை.