புகார் தரவந்த நபருக்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ... வைரலாகும் வீடியோ!
புகார் தர வந்த இளைஞரை சின்ன சேலம் சப்-இன்ஸ்பெக்டர் சரமாரியாக தாக்கி உள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி: புகார் கொடுக்க வந்த நபரை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார் எஸ்ஐ ஒருவர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்துள்ளது. இது சம்பந்தமான வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகிறது.
அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர், சின்ன சேலம் ஸ்டேஷன் உள்ளே நுழைகிறார். கையில் ஒரு புகார் மனு வைத்துள்ளார். அங்கே உட்கார்ந்திருந்த ஒரு போலீசிடம் மனுவுடன் வந்து நிற்கிறார்.
ஆனால் அந்த போலீஸ் வேறு ஒரு வேலையில் மூழ்கி உள்ளார். அதுவரை நபர் காத்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து என்ன விவரம் என்று கேட்க, இளைஞரும், தன் பைக் காணவில்லை என்றோ, அல்லது அது சம்பந்தப்பட்ட புகார் எதையோ சொல்கிறார்.
அந்த சமயத்தில், உள்ளே அறையிலிருந்து அந்த ஸ்டேஷன் எஸ்ஐ சண்முகம் வருகிறார். பாதிக்கப்பட்ட நபரை பார்த்ததும் கொதித்து போய் விடுகிறார். அவரிடம் முழுமையான விசாரணைகூட நடத்தவில்லை. ஒரு சில நிமிடங்களில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் அந்த இளைஞரை திட்டுகிறார் எஸ்ஐ.. பிறகு பளார் பளார் என்று கன்னத்தில் அறைகிறார். இதை ஸ்டேஷனில் இருந்த மற்ற போலீசாரும் பார்த்து கொண்டே நிற்கின்றனர். இந்த வீடியோதான் வைரலாகிறது.
உண்மையிலேயே, இந்த பிரச்சனையும், அதன் பின்னணியும் நமக்கு என்னவென்று தெளிவாக தெரியவில்லை. புகார் கொடுக்க வந்தவர், இதற்கு முன்பு வழக்கு ஏதாவது ஒன்றில் சிக்கி எஸ்ஐ-க்கு அறிமுகமானவரா? அல்லது எஸ்ஐ கோபப்பட்டு இளைஞரை அடிக்க வேறு ஏதாவது காரணமா என்று தெரியவில்லை.
நிஜகாரணம் நமக்கு தெரியவில்லை என்றாலும், ஒரு போலீஸ் அதிகாரி ஆபாச வார்த்தைகளை பேசி உள்ளதும், உணர்ச்சிவசப்பட்டு கை நீட்டியதும் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.