கொரோனா தாக்கிய விருதாச்சலம் தாசில்தார் கவியரசு மரணம் - பேஸ்புக் பதிவை பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி
கொரோனா பாதிப்புக்காக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விருத்தாச்சலம் தாசில்தார் கவியரசு, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேஸ்புக்கில் அவர் பகிர்ந்த பதிவைப் பல
விழுப்புரம்: அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே! என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே!...COVID-19 symptoms காரணமாக தற்போது சிதம்பரம் மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெறுகின்றேன் என்று அன்போடும் பாசத்தோடும் பதிவிட்ட தாசில்தார் கவியரசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது விருதாச்சலம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது பேஸ்புக் பதிவினை பகிர்ந்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கவியரசு, 46 வயதாகும் இவர் விருத்தாசலத்தில் தாசில்தாராக இரண்டு வருடங்களாக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றி அந்த பகுதி மக்களிடையே நேசத்திற்குரியவராக மாறினார் கவியரசு. விருத்தாசலம் பகுதியில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் சென்னை கோயம்மேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களை கணக்கெடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு விவரங்களை அனுப்பி வைத்தார்.
ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கும் கொரோனா! அடுத்தடுத்து ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று!
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி கவியரசு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு 8 வயதில் மகள் உள்ளார்.
தாசில்தார் கவியரசுவின் மரணம் விருதாச்சலம் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதும் தனது பேஸ்புக் பக்கத்தில் கவியரசு பகிர்ந்த பதிவை எடுத்து பகிர்ந்து சமூகவலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
"அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே! என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே! எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே! எனது இரண்டாண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவலர்களே! அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களே! வருவாய ஆய்வாளர்களே ! கிராம உதவியாளர்களே ! உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்துக்கொள்கின்றேன். COVID-19 symptoms காரணமாக தற்போது சிதம்பரம் RMMCH மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெறுகின்றேன்! சிறப்பு நன்றிகள் எனது ஈப்பு ஓட்டுனர் பாலு ஒரு சகோதரனைப்போல இதுகாறும் எனை பாதுகாத்தாய் ! மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன் என்று அவரது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார் தாசில்தார் கவியரசு.
மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும் என்றும் தற்காப்புடன் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு இந்த பதிவு அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மீண்டும் பிறந்து வருவீர்கள் கவியரசு என்று குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.