மீனை விழுங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர்.. தொண்டையில் மீன் சிக்கி உயிரிழந்த சோகம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வாலிபர் ஒருவர் ஏரியில் பிடித்த மீனை உயிருடன் விழுங்குவது போல் செல்பி எடுக்க முயற்சித்தபோது, மீன் தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்கள் முன் செல்பி எடுப்பது, ரயில் முன் செல்பி எடுப்பது, ஆளைக் கொல்லும் கொடிய மிருகங்கள் அருகே சென்று படம் எடுப்பது என்பது தொடங்கி அதிகாலை வாக்கிங் செல்பி, உடற்பயிற்சி நேரத்தில் செல்பி, குளியலறை செல்பி, உணவு நேர செல்பி, படுக்கை அறை செல்பிகள் என்று செய்யும் செயல் ஒவ்வொன்றினையும் குறித்து எடுக்கப்படும் செல்பிகள் மோகம் வளர்ந்து கொண்டே செல்கிறது.
பின்விளைவுகள்
மேலும் விபரீதமான முறையில் செல்பி எடுக்க முயன்று உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அபாயகரமான பகுதிகளில் நின்று செல்பி எடுக்க நினைப்பவர்கள் அதனால் நிகழும் பின்விளைவுகளை நினைத்து பார்ப்பதில்லை.
வெல்டிங் கடை
அதன்காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அதுபோன்றதொரு சம்பவம்தான் நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் மேல் அருங்குணம் கீரிமலை தென்புற வீதியை சோ்ந்தவா் அரிகண்டன் (17). கணக்கன்குப்பத்தில் உள்ள வெல்டிங் கடை ஒன்றில் வேலை பாா்த்து வந்த இவா், ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தார்.
தூண்டிலில் சிக்கிய மீன்
இந்நிலையில் அரிகண்டன் மேல் அருங்குணம் பகுதியில் உள்ள ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது தூண்டிலில் சிக்கிய மீனை உயிருடன் விழுங்குவதுபோல் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வாயில் உயிருடன் துடித்தபடி இருந்த அந்த மீன், நழுவி அவரது தொண்டைப் பகுதிக்குச் சென்று சிக்கியது.
அரிகண்டன்
இதனால், அலறித் துடித்த அவரை, உறவினா்கள் உடனடியாக மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து தொண்டையில் சிக்கியிருந்த மீனை மருத்துவா்கள் உடனடியாக அகற்றினா். எனினும், அதிக மூச்சுத் திணறல் காரணமாக அரிகண்டன் உயிரிழந்தாா்.
சோகம்
இதுகுறித்து அனந்தபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்பி மோகத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் வீடுகளில் இருக்குமாறு அரசு அறிவுறுத்திய நிலையில் இளைஞர்கள் வேண்டாத வேலையை செய்து கொண்டு தங்கள் இன்னுயிர்களை இழக்கின்றனர்.