ஆற்றில் குளிக்கச் சென்ற பெயிண்டர்.. திடீர் மரணம்.. என்னாச்சு.. நண்பர்களிடம் தீவிர விசாரணை
நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் பலி. நண்பர்களிடம் போலீசார் விசாரணை .
Recommended Video
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் திடீரென மரணமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரெட்டணையைச் சேர்ந்தவர் செல்வம். பெயிண்டரான இவருக்கு சுதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வம் கடந்த 1 ஆம் தேதி அன்று அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான அருண்குமார் மற்றும் சின்னதுரை ஆகியோருடன் வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற செல்வம் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த செல்வத்தின் உறவினர்கள், அவருடன் குளிக்கச் சென்ற அவரது நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாக கூறப்படுகின்றது. மேலும் செல்வம் அணிந்திருந்த உடை மற்றும் அவரது செருப்பு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செல்வத்தை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது உறவினர்கள் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஆற்றுப் பகுதியில் செல்வத்தை தேடி வந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று செல்வத்தின் உடல் அதே பகுதியில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக செல்வத்தின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதனிடையே செல்வத்துடன் ஆற்றில் குளிக்க சென்ற நண்பர்களை பிடித்து போலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செல்வத்துடன் குளிக்க சென்ற அவருடைய நண்பர் அருண்குமாருக்கும், செல்வத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. முன்பகை காரணமாக செல்வம் அடித்துக் கொள்ளப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.