சிப்பிபாறையில் பயங்கரம்.. திடீரென வெடித்து சிதறிய பட்டாசுகள்.. 6 பேர் பரிதாப பலி.. 4 பேர் உயிர் ஊசல்
விருதுநகர் அருகே பட்டாசு வெடிவிபத்தில் 6 பேர் பலியானார்கள்
விருதுநகர்: தாறுமாறாக பட்டாசுகள் வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.. சிப்பிப்பாறை அருகே இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பிரதானமே பட்டாசு தொழில்தான்.. வேறு தொழில்கள் இன்றி தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் இந்த பட்டாசு தொழில்தான் இன்றுவரை உள்ளது.
அதேசமயம், அடிக்கடி நிகழும் வெடி விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிர் இழப்பும் அதிகரித்து வருகிறது... பட்டாசு தொழிலில், இந்த இரு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றனவா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இப்போது தீபாவளிக்காக பட்டாசு தயாரிக்கும் மும்முரமும் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் ராஜம்மாள் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.. இது தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஆகும்.
பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.... பணியாளர்கள் வழக்கம்போல் வேலையில் இருந்தனர்.. கிட்டத்தட்ட 30 தொழிலாளர்கள் மதியம் சாப்பிட்டு விட்டு வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.. அப்போது மருந்துகளில் உராய்வின் காரணமாக பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது... இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கியும், பட்டாசுகள் சிதறியதிலும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.. எனினும் தொழிற்சாலை முழுவதும் தீ எரிந்தவாறே உள்ளது. இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.. வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து போராடி வருகின்றனர்
தொடர்ந்து வெடிபொருட்கள் வெடிப்பதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சிப்பிப்பாறை பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சியளிப்பதால் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.