இவரல்லவோ ஒரிஜினல் குடிமகன்.. அரசு தந்த 1000 ரூபாய் பணத்தை அரசிடமே திருப்பிக் கொடுத்த கொடுமை
மது அருந்திவிட்டு மனைவியை அடித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்: கவர்ன்மென்ட் குடுத்த பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயையும் வாங்கின ஒருத்தர். மொத்த பணத்துக்கும் சரக்கு அடித்துள்ளார்.
கடந்த மூன்று தினங்களாகவே "பொங்கல் பணம் எனக்கு வரலை.. உனக்கு வரலை" என்று புலம்பியும், விடிகாலைலலேயே ரேஷன் கடை முன்பும் மக்கள் கூடிவருகிறார்கள். இதற்கு நடுவில் இலவசங்களை எதற்கு தருகிறீர்கள் என்று கோர்ட் கேள்வி எழுப்ப, பெரும்பாலான மக்கள் இதனால் அதிர்ந்துவிட்டனர்.
ஆனால் ராஜபாளையத்தை சேர்ந்த வடிவேலு என்பவர் இதில் வேற மாதிரி. கூலி வேலை செய்யும் இவருக்கு வயது 35. தினமும் தண்ணி அடிப்பவர். இதனால் கணவன்-மனைவிக்கு சண்டை வந்து கொண்டே இருக்கும்.
ஆயிரம் ரூபாய்
இந்த நிலையில் தமிழக அரசு பொங்கலுக்கு பரிசாக 1000 ரூபாய் தரவும், வடிவேலு முதல் நாளே ரேஷன் கடைக்கு போய் மனைவிக்கு தெரியாமல் பணத்தை வாங்கி வைத்து கொண்டார். பின்னர் ஆயிரம் ரூபாய்க்கும் தண்ணி அடித்துள்ளார்.
தகராறு வெடித்தது
ஏற்கனவே வீட்டு செலவுக்கு எந்த பணத்தையும் தராத வடிவேலு, இந்த பணத்தையும் வாங்கி சரக்கு சாப்பிட்ட விஷயம் மனைவிக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதுசம்பந்தமாக இருவருக்குள்ளும் பிரச்சனை வெடித்தது. இது தகராறாக மாறி, வடிவேலு மனைவியை கண்மூடித்தனமாக அடிக்க ஆரம்பித்துவிட்டார்.
வடிவேலு கைது
இதுகுறித்து சேத்தூர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விரைந்து வந்த போலீசார், மனைவியை மிருகத்தனமாக தாக்கிய வடிவேலுவை கைது செய்தனர்.
அமைச்சர் ஜெயக்குமார்
பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில்தான் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதை வடிவேலு தப்பா புரிஞ்சிக்கிட்டார் போலும்! ஆயிரம் ரூபாய் தந்தாலும் பிரச்சனை ஆகுது, தரவில்லை என்றாலும் பிரச்சனை ஆகுது. கடைசியில் அரசு பணம் அரசுக்கே திரும்பி விட்டது!!