ரஜினி அரசியல் முடிவை கைவிட்டது தேசத்திற்கே பேரதிர்ச்சி.. நடிகை கவுதமி கவலை
விருதுநகர்: ரஜினி தனது அரசியல் முடிவை கைவிட்டது தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் தேசத்திற்கே பேரதிர்ச்சியாக உள்ளது என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதில்லை என தனது டவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 3ஆம் தேதி ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், நிச்சயம் வருவேன் என சொன்ன ரஜினிகாந்த் தற்போது திடீரென அரசியலுக்கு வரவில்லை என கூறியுள்ளார்.
நடிகை கவுதமி
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேர்தல் பொறுப்பாளரும் நடிகையுமான கவுதமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், ரஜினி கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டது. தமிழகம் மட்டுமல்லாது தேசத்திற்கே பேரதிர்ச்சியாக உள்ளது.
நல்லபடி
ரஜினி கடைசி நேரத்தில் அவர் கட்சி அறிவிப்பு திட்டத்தை கைவிட்டது. அவருடைய சூழ்நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்திருப்பார். அவர் நல்லபடியாக இருக்க நான் வேண்டிக் கொள்கிறேன்.
அர்த்தம் இல்லாத பேச்சு
ரஜினி அரசியல் முடிவால் பாஜக எந்த விதத்திலும் குழுவில் இருந்து பின்வாங்காது எங்களுடைய பணிகள் தொடரும். ரஜினியை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்றி விடலாம் என்ற திட்டம் கைவிடப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு, கட்சி ஆரம்பிக்காத ஒருவரை வைத்து இதுபோன்று பேசுவது அர்த்தம் இல்லாத பேச்சு.
நியாயமான கட்சி
மக்கள் யார் நல்லது செய்துள்ளார்கள் என்பதை வைத்து தான் ஓட்டு போடுவார்கள். நியாயமான கட்சிக்கு மக்கள் ஒட்டு போடுவார்கள். பாஜக தேசிய கட்சி ரஜினியிடம் ஆதரவு கேட்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் பணிகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என கவுதமி தெரிவித்துள்ளார்.