அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
அதிமுக மகளிரணி மாவட்ட நிர்வாகி விபச்சார வழக்கில் சிக்கியிருப்பது ஷாக் கொடுத்துள்ளது.
விருதுநகர் : விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி துணைத் தலைவியும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியாக வாடகைக்கு வீடு பிடித்து இளம்பெண்களை வைத்து விருதுநகர் அதிமுக மாவட்ட மகளிரணி தலைவர் அமல்ராணி பாலியல் தொழில் செய்து வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் உள்ள ஒரு வீட்டில் புதிது புதிதாக சிலர் வந்து போவதாக தகவல் வந்த நிலையில், போலீசார் அதிரடி ரெய்டில் இறங்கினர். அப்போது மாட்டிய இளம்பெண்ணிடம் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதிமுக மாவட்ட மகளிரணி துணைத் தலைவி தனது கணவருடன் சேர்ந்து விபச்சார தொழில் ஈடுபட்டது தெரியவந்தது.
பகலில் அரசு பஸ் டிப்போ.. இரவில் விபச்சார விடுதி.. சமூக விரோதிகள் அட்டூழியம்.. கொதிக்கும் மக்கள்
அதிமுக மகளிர் அணி தலைவி
விருதுநகர் கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). இவரது மனைவி அமல்ராணி (40). அமல்ராணி விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணை தலைவியாக உள்ளார். கணவன், மனைவி இருவரும் விருதுநகர் பேராலி ரோடு ஐடிபிடி காலனியில் ஒரு வீட்டை புதிதாக வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக விபச்சாரம் நடப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
போலீஸ் ரெய்டு
இதனைத் தொடர்ந்து ஊரக காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீசார் நேற்று இரவு அந்த வீட்டிற்கு திடீரென சென்றனர். அந்த வீட்டில், ஒரு பெண்ணும் ஆணும் தனிமையில் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் அங்கு விபச்சாரம் நடைபெற்றது தெரியவந்தது.
சிக்கிய இளம்பெண்
போலீசார் சென்றபோது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் சாத்தூர் மேட்டமலையைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் என்றும், அங்கிருந்த ஆண் சிவகாசியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த இளம்பெண்ணிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத்தலைவி அமல்ராணி, மற்றும் அவரது கணவர் சந்திரசேகரன் ஆகியோர், அங்கு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி
இதையடுத்து, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத்தலைவி அமல்ராணி, மற்றும் அவரது கணவர் சந்திரசேகரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களது காரையும் பறிமுதல் செய்தனர். விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.