அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தோற்பது உறுதி... சொல்வது வேறுயாருமல்ல... அதிமுக MLA ராஜவர்மன் தான்..!
விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் பேசியிருக்கிறார்.
மேலும், மீடியாக்களில் கண்டதை பேசி அதிமுகவை குட்டிச்சுவராக்கி வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சீறியுள்ளார் எம்.எல்.ஏ. ராஜவர்மன்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே அமைச்சருக்கு எதிராக இப்படி கொந்தளித்து பேசியிருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆ.ராசா உடன் விவாதிக்க நான் தயார்... வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் - ராஜேந்திரபாலாஜி
அதிமுகவில் கலகம்
விருதுநகர் மாவட்ட அதிமுகவில் கலகம் வெடித்திருக்கிறது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தனக்கு பிடிக்காதவர்களை ஓய்ப்பதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்ன வேண்டுமானாலும் செய்வார் என சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தெரிவித்துள்ளார். அவர் கூடவே இருந்ததால் அவரைப் பற்றிய அனைத்து விவகாரங்களும் தனக்கு அத்துப்படியாக தெரியும் எனக் கூறியிருக்கிறார்.
எம்.எல்.ஏ. சத்தியம்
திருச்செந்தூர் முருகன் மீது சத்தியமாக தாம் சொல்வது உண்மை என்றும் மாலை போட்டுக்கொண்டு பொய் பேசவேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் கூறியிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவை அழித்து வருவதாகவும் பேட்டிகொடுத்தே கட்சியை ஓய்த்து வருவதாகவும் ராஜேந்திரபாலாஜி பற்றி விமர்சித்துள்ளார்.
பொய் வாக்குறுதி
மேலும், பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் நீ தான் ஒன்றியச் செயலாளர் எனக் கூறி ஆசையை உருவாக்கி தன் பின்னால் கார்களை எடுத்துக்கொண்டு அமைச்சர் அலையவிடுவார் என்றும் ராஜேந்திரபாலாஜி செய்யும் அட்டூழியங்கள் அனைத்தும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியும் என்றும் ஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் பொறுமை காத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு
அமைச்சரை எதிர்க்கத் தான் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தன்னை இறக்கிவிட்டார்கள் என்றும் தாம் எதிர்க்கவில்லை என்றால் ராஜேந்திரபாலாஜியின் வீராப்புக்கு அளவே இல்லாமல் போயிருக்கும் எனவும் கூறியுள்ளார். தாம் விருதுநகர் மாவட்டத்தில் எதிர்ப்பதால் தான் வேறுவழியின்றி இ.பி.எஸ். அண்ணன் காலில் அமைச்சர் விழுவதாக சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தெரிவித்திருக்கிறார்.
பரபரப்பு புகார்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில் அமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே இத்தகைய பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது அதிமுகவில் அதிகரித்து வரும் உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.