கோர்ட்டுக்கு வராத நிர்மலா தேவி.. பிடிவாரண்ட் பிறப்பித்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்.. கைதாவாரா?
பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஏற்கனவே 2 முறை கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.. இந்த முறையும் ஆஜராகாததால், நிர்மலாதேவியின் ஜாமீனை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.. அத்துடன் நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட்டையும் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முயன்றது சம்பந்தமாக நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். கூட்டு சதி செய்தது உட்பட சில பிரிவுகளில் நிர்மலாதேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சிறை சென்ற நிர்மலாதேவி உட்பட 3 பேருமே இப்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். ஆனால், இது சம்பந்தமான விசரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் இன்னமும் நடந்து வருகிறது.
அந்த வகையில், நவம்பர் 18-ம் தேதி அதாவது இன்று ஆஜராக வேண்டும் என்று சம்பந்தப்பட்ட 3 பேருக்கும் போன மாசமே கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. மேலும் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கப்படும் என்றும் அப்போது நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜரான நிலையில், நிர்மலா தேவி மட்டும் ஆஜராகவில்லை. பேராசிரியை நிர்மலா தேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வக்கீல் பசும்பொன் கோர்ட்டில் தெரிவித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதனால்தான் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றும் வக்கீல் தெரிவித்தார். ஆனால் இதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். நிர்மலா தேவிக்கு அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து, பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2 முறை ஆஜராக உத்தரவிட்டும், நிர்மலாதேவி இந்த முறையும் ஆஜராகததால் இந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. "கோர்ட்டில் ஆஜரானால் ஆசிட்டை வீசுவோம் என கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்" என்று நிர்மலாதேவி, வக்கீல் பசுபதிபாண்டியனிடம் பேசிய ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.